மினுவாங்கொடையில் நேற்று 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; இராணுவத் தளபதி தகவல்

மினுவாங்கொடையில் மேலும், 101 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 79 பேர் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் எனவும் ஏனைய 22 பேரும் குறித்த தொழிலாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இதுவரை மினுவங்கொடை கொவிட்-19 தொற்று கொத்தணியில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 287ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இதுவரை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை நான்கு ஆயிரத்து 689 ஆகபதிவாகியுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து இதுவரை மூவாயிரத்து 306 பேர் குணமடைந்து வீடுகளுக்குத்திரும்பியுள்ள நிலையில் இன்னும் ஆயிரத்து 308 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 13 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.