மாவீரர் நினைவு கூரல் -அம்மாறை மாவட்டத்திலும் நீதி மன்றத்தினால் தடை

அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர்களை நினைவேந்துவதற்கு நீதிமன்றங்களால் தடை விதிக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் கொரோனா தனிமைப்படுத்தல் சட்டம் ஆகியவற்றைக் காரணம் காட்டி பொலிஸார் மன்றிற்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இந்தத் தடை உத்தரவு நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் உள்ளிட்ட ஐவருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

‘இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

IMG 20201123 073620 மாவீரர் நினைவு கூரல் -அம்மாறை மாவட்டத்திலும் நீதி மன்றத்தினால் தடை

பயங்கரவாத அமைப்பைக் கொண்டாடுவது அல்லது அதற்கு ஆதரவை வெளிப்படுத்தும் நிகழ்வுகளைத் தனியாகவோ, குழுவாகவோ ஒழுங்கமைப்பதும், பங்கேற்பதும் சட்டத்துக்குப் புறம்பானதாகும்.

மாவீரர் நாள் என்பது, தமிழீழ விடுதலைப் புலிகளால் கடைப்பிடிக்கப்பட்ட மரபுகளில் ஒன்று. விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இத்தகைய நிகழ்வுகளை நடத்த அனுமதிக்கப்படாது.

அதேவேளை, கொரோனா தனிமைப்படுத்தல் சட்டம் நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கின்றபோது அதை மீறிப் பொது வெளியில் மக்கள் ஒன்றுகூடி நிகழ்வுகளை நடத்தவும் அனுமதிக்கப்படக்கூடாது’ என அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பொலிஸார் அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றுக்கு செய்து அறிக்கையின் பிரகாரம்  நீதி மன்றினால் இந்த தடை உத்தரவு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று அச்சம் குறைவாகக் காணப்படும் வடக்கிலும், கிழக்கிலும் அரச நிகழ்வுகள், அமைச்சர்களின் நிகழ்வுகள் பிரமாண்டமாக நடைபெற்று வரும் நிலையில், தமிழர்களின் உணர்வு, உரிமை சார்ந்த நிகழ்வுகள் இந்த ஆட்சியில் கொரோனா தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம் ஆகிவற்றைக் காரணம் காட்டி அடக்கப்படுகின்றது என தமிழ் உணர்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.