மாவீரர்களுக்கு களங்கம் ஏற்படுத்த முயன்ற துணை இராணுவக்குழுவினர் மக்களால் துரத்தப்பட்டனர்

மட்டக்களப்பு,கல்லடி பகுதியில் உள்ள மாவீரர் நினைவாலயம் பகுதியில் மாவீரர்களை களங்கப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிள்ளையான் குழுவினர் ஆலய நிர்வாகத்தினராலும் கல்லடி பகுதி மக்களினாலும் இன்று துரத்தியடிக்கப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் குறித்த மாவீரர் நினைவாக மாவீரர் நினைவாலயம் கல்லடி சித்தி விநாயகர் ஆலயத்திற்கு சொந்தமான காணியில் குறித்த நினைவாலயம் மாவீரர்கள் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த நினைவாலயத்தில் இன்று மாலை பிள்ளையான் குழுவின் மண்முனை வடக்கு பிரதேச அமைப்பாளர் உட்பட சிலர் அத்துமீறி நுழைந்து அங்கு புனரமைப்பு வேலைகளை முன்னெடுத்தபோது ஆலய நிர்வாகத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களை சுட்டுக் கொலைசெய்தும் காட்டிக்கொடுத்தும் தமது செயற்பாடுகளை முன்னெடுத்தவர்கள் மாவீரர் துயிலும் இல்லத்திற்குள் செல்வதற்கு அருகதையற்றவர்கள் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

தமிழீழ விடுதலைப்புலி இயக்கத்துடனான போர் மௌனிக்கப்பட்டதன் பின்னர் பால்சோறு வழங்கியும் பட்டாசு கொழுத்தியும் கொண்டாடியவர்கள் இன்று தமது அரசியல் சுயலாபத்திற்காக மாவீரர் தினத்தினை நடாத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.

pillaiyan 2 மாவீரர்களுக்கு களங்கம் ஏற்படுத்த முயன்ற துணை இராணுவக்குழுவினர் மக்களால் துரத்தப்பட்டனர்பிள்ளையான் குழுவினர் வெருகல் பகுதியில் வருடாந்தம் விடுதலைப் புலிகளினால் கொல்லப்பட்ட துரோகிகளுக்கு நினைவுதினம் அனுஸ்டித்து அதன் ஊடாக விடுதலைப்புலிகளை கடுமையான வகையில் விமர்சனம் செய்யும் நிலையில் இன்று தமக்கான ஆதரவினை தேடுவதற்காக மாவீரர்களை கையிலெடுத்துள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது பிள்ளையான் குழுவினருக்கான ஆதரவு தளம் மிகவும் குறைந்துவரும் நிலையில் மாவீரர்களுக்கு விளக்கேற்றி தமது வாக்கு வங்கியை அதிகரிக்கலாம் என இவர்கள் நினைப்பதாகவும் கல்லடி பகுதி மக்கள் தெரிவிக்கினற்னர்.