மலேசியா: நீதிமன்ற உத்தரவை மீறி நாடுகடத்தப்பட்ட மியான்மர் குடியேறிகள்

மியான்மர் இராணுவ ஆட்சியின் கீழ் வந்துள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால், சட்டவிரோத குடியேறிகளாக அறியப்படக்கூடிய சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட மியான்மரிகளை நாடுகடத்தக்கூடாது என மலேசிய அரசுக்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அந்த உத்தரவை மலேசிய அரசு மீறியிருக்கின்றது.

மலேசிய தரப்பில், இதில் அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் உள்ளடக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள போதிலும் தற்போது நாடுகடத்தப்பட்டவர்களில் 6 பேர் ஐ.நா. அகதிகள் முகமையிடம் பதிவுச்செய்தவர்கள் என ஐ.நா.தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் மலேசியாவில் ஐ.நா. அகதிகள் முகமையிடம் பதிவுச் செய்த மொத்த அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை 178,610 ஆக உள்ளது.

இதில் மியான்மரைச் சேர்ந்தவர்கள் மட்டும் 154,030 எனப்படுகின்றது. இந்த எண்ணிக்கையினுள் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் எண்ணிக்கை 102,250 ஆக உள்ளது, சின் இனத்தவர்களின் 22,410 ஆக உள்ளது, இன்னும் பிற இனக்குழுக்களின் எண்ணிக்கை 29,360 ஆக உள்ளது. இவர்கள் அனைவரும் மியான்மரில் உயிர் அச்சுறுத்தல் மிக்க சூழலை எதிர்கொண்டதன் அடிப்படையில் மலேசியாவில் தஞ்சமடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.