‘மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை வரவேற்கின்றோம்’-சுமந்திரன்

நாங்கள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை வரவேற்கின்றோம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சண்டே டைம்சிற்கு தெரிவித்துள்ளார்.

மேலும் “மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்திற்கு நாங்கள் அனுப்பி வைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் ஆணையாளரின் அறிக்கையில் காணப்படுவதை பலர் அவதானித்திருப்பார்கள்” என்று தெரிவித்த  சுமந்திரன், இது ஒரு தற்செயல் நிகழ்வு என  தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தான் வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து நாடொன்று பின்வாங்கினால் அதன் பின்னர் அதற்கான இயல்பான விளைவுகள் உருவாகும் என்றும்  யுத்தகால பொறுப்புக்கூறும் பொறிமுறையை பொறுத்தவரை ஐக்கிய நாடுகள் தீர்மானத்தின் மூலம் இலங்கை கலப்புபொறிமுறைக்கு சம்மதம் வெளியிட்டது எனவும் எனினும் பின்னர், முன்னர் ஏற்றுக்கொண்டபடி அவ்வாறான பொறிமுறைகளில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என தெரிவித்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த பெப்ரவரியில் அரசாங்கம் ஐநா தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அறிவித்தது. இந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு குறிப்பிட்ட நாட்டின் சம்மதம் அவசியம்.

வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் சமீபத்திய பேட்டிகளை பார்க்கும்போது பத்து வருடத்தின் பின்னரும் அரசாங்கம் மறுக்கும் மனோநிலையிலேயே உள்ளதை புலப்படுத்துகின்றது.

யுத்தகால பொறுப்புக்கூறலிற்கு இலங்கைக்கு பத்து வருடங்கள் வழங்கப்பட்ட பின்னரும் அது நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதால் நாங்கள் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவேண்டியுள்ளது” என்றார்.