போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணி

எதிர்வரும் 3ஆம் திகதி தொடக்கம் 6ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு சிவில் சமூக அமைப்புகளால் நடாத்தப்படும் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை போராட்டத்திற்கு சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணி ஆதரவு வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் சிறீலங்கா  சுதந்திரக் கட்சியின் கல்குடா தொகுதி இளைஞர் அணி தலைவரும், செங்கலடி பிரதேச சபை உறுப்பினருமான வ.சுரேந்திரன் வெளியிட்டுள்ள ஆதரவு அறிக்கையில்,

“வடகிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அடக்குமுறைக்கு எதிராக பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்று திரளுமாறு வடகிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாக இணைந்து அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு, மனித உரிமை மீறல்கள், பாரம்பரிய இந்து ஆலயங்களை அழிக்கும் செயற்பாடுகள், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சிங்கள குடியேற்றங்கள், முஸ்லீம் மக்களின் ஜனாசாகளை எரிப்பது, தமிழ் முஸ்லிம் அப்பாவி இளைஞர்கள் மீது ஏவி விடப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்டம், சிறைகளில் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் என தமிழ் பேசும் மக்களின் தாயகத்தில் திட்டமிட்டு நடாத்தப்படும் இன ஒடுக்குமுறைக்கு எதிராக வடகிழக்கு சிவில் சமூக அமைப்புக்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

உரிமைகளை இழந்து நீதி மறுக்கப்பட்ட சமூகமாக வாழும் எனது உயிர் இருக்கும் வரை நான் தொடர்ந்தும் மக்களுடன் பயணம் செய்வேன் என்பதை இந்த போராட்டத்தின் ஊடாக தமிழ் மக்கள் புரிந்து கொள்வார்கள். தொல்லியல் இடங்களை அடையாளம் காணுதல் என்ற போர்வையில் தமிழ் பேசுனரின் கலாசாரங்களை சிதைப்பதும், பௌத்தமயமாக்கலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தொல்லியல் இடங்கள், புனித பூமி, பயிர்ச்செய்கை என்ற அடிப்படையில் தமிழ் பேசுவோரின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. அயல் மாவட்டச் சிங்களவர்கள் குடியேற்றப்படுகின்றனர். இவற்றை எல்லாம் ஜனநாயக ரீதியாகவும், சட்டரீதியாகவும், அஹிம்சை ரீதியாகவும் எதிர்க்க வேண்டியதும், தடுக்க வேண்டியதும் காலத்தின் கட்டாய தேவையாகவுள்ளது.

எனவே எதிர்வரும் 3ஆம் திகதி தொடக்கம் 6ஆம் திகதி வரை வடகிழக்கு சிவில் சமூக அமைப்புகளால் நடாத்தப்படும் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை போராட்டத்திற்கு வடகிழக்கில் உள்ள தமிழ் இளைஞர்கர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்” என்றார்.