மணிவண்ணன் தலைமையில் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை; புதிய அமைப்பு யாழில் ஆரம்பம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக இருந்த சட்டத்தரணி மணிவண்ணன் தலைமையில் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை என்ற அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

மணிவண்ணனை அமைப்பில் இருந்து நீக்குவதாக அண்மையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்திருந்தார். ஆயினும் தானே அமைப்பின் தேசிய அமைப்பாளராகத் தொடர்ந்தும் செயற்படுவேன் என்று மணிவண்ணன் கூறினார்.

இதனை அடுத்து கட்சி உறுப்புரிமையில் இருந்து மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று பகிரங்கமாக அறிவித்தார். இந்நிலையில் மணிவண்ணனைத் தலைமை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அமைப்பாகச் செயற்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் யாழ்.மாநகர சபை உறுப்பினர் பார்த்தீபன் உட்பட பல மாநகர, நகர, பிரதேச சபை உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர்களும் இணைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.