கூட்டமைப்பை மோடி சந்திப்பாரா? இராஜதந்திர முயற்சிக்கு டில்லியிலிருந்து பதில் இல்லை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய மத்திய அரசுடன் பேச்சு நடத்துவதற்கான இராஜந்திர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் எனக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இருந்த போதிலும், இது தொடர்பில் புதுடில்லியிலிருந்து உறுதியான பதில் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கான இந்தியத் தூதுவரை அண்மையில் சந்தித்துக் கலந்துரையாடியபோதும் இதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கூட்டமைப்பு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை டில்லிக்கு அழைத்துப் பேச்சு நடத்துவதற்கு பிரதமர் மோடி, முன்னர் இலங்கை வந்திருந்தபோது விருப்பம் வெளியிட்டிருந்தார். அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றாலும் பின்னர் பயணம் பிற்போடப்பட்டது.

இந்தியாவின் தலையீட்டுடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டம், புதிய அரசமைப்பின் ஊடாக மாற்றியமைக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே புதிய அரசமைப்பின் ஊடாக தமிழர்களுக்கான தீர்வை பெறுவதற்கு டில்லியின் தலையீட்டைக் கூட்டமைப்பு கோரவுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு டில்லி இராஜதந்திர மட்டத்திலான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது. கூட்டமைப்பின் கோரிக்கைக்கு டில்லி தரப்பில் இருந்தும் இன்னும் பச்சைக்கொடி காட்டப்படவில்லை.

கொழும்புடனான உறவைக் கருத்திற்கொண்டு கூட்டமைப்புடனான நேரடிச் சந்திப்பை பிரதமர் மோடி தவிர்த்தால்கூட விசேட பிரதிநிதியயாருவரை இலங்கைக்கு அனுப்பக்கூடும் எனவும் இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.