மட்டக்களப்பில் கொரோனா – ஊரடங்கினைத் தளர்த்த ஆலோசனை

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் மூன்று நாட்கள் அவதானித்து மேலும் கொரோனா பரவல் இல்லாவிட்டால் ஊரடங்கினை தளர்த்துவதற்கு தீர்மானித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

மூன்று நாட்களின் பின்னர் பரவல் அதிகரித்தால் ஊரடங்கினை நீடிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்,“மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 76பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 2378 குடும்பங்களுக்கு 10ஆயிரம் ரூபா வீதம் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனைவிட 27554 குடும்பங்களுக்கு தொழில் பாதிப்புக்கான 5000ரூபா உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.161மில்லியன் ரூபா கொரோனா நிவாணமாக வழங்கப்பட்டுள்ளது” என்றார்.