மட்டக்களப்பில் ஊடகவியலாளர் கைது- பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் வாழைச்சேனை பொலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளராக கடமையாற்றி வந்த முருகுப்பிள்ளை கோகுலதாசன் (37) என்ற ஊடகவியலாளரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் புகைப்படங்களை முகநூலில் பதிவிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் குறித்த ஊடகவியலாளரை வாழைச்சேனை பொலிசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் மீது பயங்கரவாதச் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு மூன்று நாட்கள் தடுத்து வைப்பதற்கான அனுமதியை வாழைச்சேனை பொலிசார் பெற்றுள்ளனர்.

மூன்று நாட்களின் பின்னரே குறித்த ஊடகவியலாளரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக வாழைச்சேனை பொலிசார்  மேலும் தெரிவித்துள்ளனர்.