மக்கள் வங்கி உதவி முகாமையாளர் நல்லூர் விபத்தில் பலி – மின்தடைப்பட்ட நேரம் துயரம்

 

யாழ்ப்பாணம், நல்லூரில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மக்கள் வங்கியின் கன்னாதிட்டிக் கிளை உதவி முகாமையாளர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் தலையில் படுகாயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

மின் தடைப்பட்டிருந்தவேளையில் விபத்து இடம்பெற்றதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்று இரவு 8.45 மணியளவில் நல்லூர் வீர மாகாளி அம்மன் வீதியில் இடம்பெற்றது.

சம்பவத்தில் பருத்தித்துறையைச் சேர்ந்தவரும் நல்லூரில் வசிப்பவருமான சிறிஸ்கந்தராஜா பகீரதன் (வயது-40) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.