மகனை தேடியலைந்த தந்தையொருவர் உயிரிழந்தார்

வவுனியாவில் தனது 26வயதுடைய மகனைத் தேடி தொடர் போராட்டம் மேற்கொண்ட தந்தை ஒருவர் நேற்று இரவு சுகயீனமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை இன்று‌ அதிகாலை உயிரிழந்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் தமது மகனைத் தேடி சுழற்சி முறையிலான தொடர்போராட்டம் இன்றுடன் 913 ஆவது நாளை எட்டியுள்ளது இந்நிலையில் தனது மகன் அச்சுதன் வயது 26 கடந்த 2009ஆம் ஆண்டு ஓமந்தை இராணுவச் சோதனைச்சாவடியில் வைத்து இராணுவத்தினரிடம் கையை உயர்த்தி ஒப்படைக்கப்பட்ட தனது மகனை மீட்கும் போராட்டத்தில் இணைந்திருந்த வேலாயுதம் செல்வராசா 56வயது மகிழங்குளம் ஓமந்தை இடத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு நேற்று இரவு 10மணியளவில் வைத்தியசாலையில் உயர் குருதி அழுத்தம் காரணமாக‌ அனுமதிக்கப்பட்டிருந்தவர் இன்று உயிரிழந்துள்ளார். இவருடைய மனைவி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இதேவேளை வவுனியா போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இவருடன் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். வடகிழக்கு மாவட்டத்தில் போராட்டம் மேற்கொண்டு வரும் உறவுகள் இன்றுவரையிலும் 39பேர் தமது பிள்ளைகளைத் தேடிய போராட்டத்தில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.