போர் நிறைவுற்று 15 ஆண்டின் பின்பும் தொடரும் படையினரின் அத்துமீறல்கள் – உண்மைக்கும் நீதிக்குமான செயல்திட்டம்

சூக்கா போர் நிறைவுற்று 15 ஆண்டின் பின்பும் தொடரும் படையினரின் அத்துமீறல்கள் - உண்மைக்கும் நீதிக்குமான செயல்திட்டம்உள்நாட்டுப் போர் முடிந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பாதுகாப்புப் படையினர் தமிழ் இளைஞர் யுவதிகளை கடத்திச் சென்று காணாமல் ஆக்குவதும், அவர்களை பாரதூரமான உடல் மற்றும் பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்குவதும் தொடர்ந்தும் இடம்பெறுவதாக சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயல்திட்டத்தின் புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவ் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“தமிழர்களின் காணாமல் போதல்கள், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகள், 2015-2022′ என்னும் இவ்வறிக்கையில், இந்த ஏழாண்டு காலப்பகுதியில், 139 தடவைகள் பாதுகாப்புப் படைகளால் சட்டவிரோதமாகப் பிடித்துச்செல்லப்பட்டு, தடுத்துவைத்திருக்கப்பட்ட, 20-39 வயதிற்குட்பட்டவர்களைப் பெரும்பான்மையானவர்களாகக் கொண்ட, 109 ஆண்களும் 14 பெண்களுமாக, 123 தமிழர்களது வாக்கு மூலங்கள் ஆராயப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட இத்தமிழர்கள் அனைவரும் இப்போது இலங்கைக்கு வெளியே வசிக்கின்றார்கள்.

2009இல் போர் முடிந்த பின்னர், தமிழர்கள் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவது தொடர்பில் முன்னர் வெளியிட்ட அறிக்கைகளின் தொடர்ச்சியாக வெளிவரும் இப்புதிய அறிக்கை, சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின்
உறுப்பினர் களுக்கும் தமிழ்ப் பொதுமக்களுக்கும் எதிரான கடத்தல், காணாமல் போகச்செய்தல் மற்றும் சித்திரவதைகளில் பாதுகாப்புப் படைகளால் போர் முடிவடைந்த உடனடி ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அதே முறைமைகளும் நடைமுறைகளுமே இற்றைவரையும் தொடர்வதைக் காட்டுகின்றது.

மேற்கொள்ளும் குற்றங்களுக்கு எவ்விதமான பின்விளைவுகளையும் எதிர்கொள்ளாமல் அதிகாரத்தைப் பயன்படுத்துவது என்றுதான் தண்டனையிலிருந்து விலக்களித்தல் என்பது வரையறை செய்யப்படுகின்றது. இது காலப்போக்கில் அரசியல் அமைப்புக்களிலுள்ளும் அரசியல் கலாச்சாரத்தினுள்ளும் ஆழ வேரூன்றிப் போயுள்ளது.

பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பாரதூரமான சர்வதேக் குற்றங்களுக்கு எவ்விதமான பொறுப்புக் கூறலுமில்லாமல் பல தசாப்தங்களாக இத்தண்டனை விலக்களிப்பு நிலைநாட்டப்பட்டுள்ளது. பாதுகாப்புதுறை சீரமைக்கப்படுவதற்கும், தமிழர்களுக்கு எதிராக இவ்வன்முறைக் கலாச்சாரத்திற்குப் பொறுப்பானவர்களை நீக்குவதற்கும் சர்வதேச சமூகம் பாரிய அழுத்தத்தைக் கொடுத்தால் மட்டுமே இதனை நிறுத்திக்கொள்ள முடியும்.

இவ்வறிக்கையில் ஆய்வுசெய்யப்பட்ட வாக்குமூலங்களை வழங்கியவர்கள் பிரித்தானியாவிலோ அல்லது இதர இடங்களிலோ புகலிடம் கோரும் தமிழர்களின் ஒரு சிறு பகுதியினர் மட்டுமே’ இவ்வாறு சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயல்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்தார்.

இவ்வறிக்கையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 2022இல் இடம்பெற்ற தடுத்து வைப்புக்களில், அவரைவாசி- 24பேரில் 11 பேர் – சம்பவங்கள் யூலை 2022 இல் ரணில் விக்கிரமசிங்கவின் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரேயே நிகழ்ந்தன. இந்த 139 சம்பவங்களில், 65 சம்பவங்களில், பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது சொந்த வீடுகளிலிருந்து அல்லது உறவினர்களின் வீடுகளிலிருந்து, உறவினர்கள் முன்னிலையில் சிறிலங்காவின் சட்ட அமுலாக்கள் அதிகாரிகளால் பிடித்துச் செல்லப்பட்டார்கள்.

இதர சம்பவங்களில் பெரும்பாலானவற்றில், அவர்கள் வீட்டுக்கு அல்லது வேலைக்குச் சென்றுகொண்டிருக்கையில் பிடித்துச் செல்லப்பட்டார்கள். இவ்வனைத்துச் சம்பவங்களிலும், தடுத்து வைக்கப்பட்டவர்களது கண்கள் கட்டப்பட்டும், கைகள் பின்னால் கட்டப்பட்டும், பெரும்பாலும் வெள்ளைநிற வான்களிலேயே பிடித்துச் செல்லப்பட்டிருக்கின்றார்கள். ஒரு சில சம்பவங்களைத் தவிர, மற்றைய அனைத்திலும் அவர்கள் அடையாளம் தெரியாத இடங்களுக்கே கொண்டு செல்லப்பட்டதுடன், குடும்பங்களுக்கும் அவர்கள் எங்கே கொண்டுசெல்லப்பட்டார்கள் என்றும் தெரிவிக்கப்படவில்லை.

இரகசியத் தடுப்பு மையங்களில் தடுத்து வைத்திருக்கப்பட்டிருக்கையில், 139 தடுப்புக்காவல் சம்பவங்களில் 130 இல், விசாரணைகளின்போது, குறைந்த பட்சம் கடுமையாகத் தாக்கப்பட்டது உட்பட சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டிருந்தனர். 85 சம்பவங்களில், பிளாஸ்ரிக் பைகளால் மூச்சுத்திணறல் செய்யப்பட்டது. 47 சம்பவங்களில் சிகரட் அல்லது சூடான பொருட்களால் அவர்களுக்கு சூடுவைக்கப்பட்டது. 46 பேர் நீரில் முகத்தை அழுத்தி மூச்சுத் திணறலுக்கு உள்ளாக்கப்பட்டனர். 32 சம்வங்களில் அவர்கள் கயிற்றில் கட்டித் தொங்கவிடப்பட்டனர். 85 சம்பவங்களில் அவர்கள் பலமுறையான வடிவங்களில் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்” எனக் கூறப்பட்டிருந்தது.