போராட்டம் வேறு வடிவங்களில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் – சிறிதரன் எம்.பி.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை போராட்டம் இத்துடன் முடிவுறுத்தப்படாமல் தொடர்ச்சியாக இன்னும் சில மாதங்களில் வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு –

“தமிழ் மக்களின் தேசிய விடுதலை வரலாற்றிலே இது ஒரு முக்கியமான மைல்கல். ஆயுத விடுதலைப் போராட்டத்துக்குப் பிற்பாடு நிறைந்த நெருக்கடிகள், அடக்குமுறைகள் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைக் கொடுமைகள் இவற்றையெல்லாம் தாண்டி பல்வேறுபட்ட போராட்டங்கள் நடை பெற்றிருந்தாலும் கூட – வரலாற்று ரீதியாக கொண்டுவரப்பட்டிருக்கின்ற, வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டிலே முன்னிலைப்படுத்தப்படுகின்ற இந்தப் போராட்டம் முக்கிய பாத்திரத்தை கொண்டுள்ளது.

குறிப்பாக வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களின் தேசிய எழுச்சியையும் தேசிய இருப்பையும் இது முன்னிலைப்படுத்தியிருக்கின்றது. இந்தப் போராட்டம் இத்துடன் முடிவுறுத்தப்படாமல் தொடர்ச்சியாக இன்னும் சில மாதங்களில் வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்படும்” என்றார்.