தவறான திசையில் போனவர்கள் சரியான பாதைக்கு வந்துள்ளனர் – கஜேந்திரகுமார்

கடந்த பத்து வருடங்களாக பிழையான திசைக்கு இந்த அரசியலை கொண்டுசென்ற தரப்புகள்கூட தவிர்க்க முடியாமல் இன்று சரியான பாதைக்கு வந்திருக்கின்றன. இந்த நிலைமை மேலும் பலப்பட எங்கள் மக்களினது ஆதரவும் எழுச்சியும் அத்தியாவசியம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரையிலான போராட்டத்தின் போது கருத்து தெரிவித்த அவர் – எம்மைப் பொறுத்தவரையில் 2009 இற்குப் பிற்பாடு தமிழ் அரசியல் ஒரு பிழையான திசையில் சென்றுகொண்டிருந்த ஒரு நிலையிலே இன்று அந்த பிழையான அரசியலை சரியான திசையிலே கொண்டுவருவதற்கான அத்திபாரம் இடப்பட்டுள்ளது.

மக்களைத் திசைமாற முடியாத அளவிற்கு சவால் விடுகின்ற வகையிலேயே மக்கள் அணிதிரண்டு, தெளிவான செய்தியை அனைத்து தரப்புகளுக்கும் வழங்கவேண்டும். போர்முடிவடைந்த பின்னர் எழுக தமிழ் நிகழ்வு மிகவெற்றிகரமாக நடைபெற்றது, ஆனால், வடக்கு, கிழக்கு அனைத்தையும் இணைத்து தமிழ்பேசும் மக்கள் என்ற எங்கள் முஸ்லிம் மக்கள் முழுமையாக ஆதரிக்ககூடிய இந்தப் போராட்டத்தை அங்கீகரிக்ககூடிய வகையிலே யாழ் குடாநாட்டிலே இருக்கின்ற மக்கள் மாத்திரமல்லர் வடக்கு, கிழக்கில் இருக்கின்ற அனைத்து மக்களும் கரங்களை பலப்படுத்தவேண்டும்” என்றார்.