பேச்சு வார்த்தையின் போது வடக்குடன் கிழக்கையும் ஒன்றிணைத்து பேச அழைக்க வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

வடக்கின் அதிகாரப் பரவலாக்கம், நிர்வாகம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் போது கிழக்கு மாகாணத்தையும் ஒன்றிணைத்து நடத்துவது சிறந்ததாக உள்ளது.

எனவே இவ் விடயத்தில் ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் 11 ,12,13 ஆம் திகதிகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து பேச உள்ளதாகவும் அதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது வடக்கின் அபிவிருத்தி மற்றும் அதிகார பரவலாக்கம் தொடர்பாகவும் வடக்கில் இடம் பெறுகின்ற பிரச்சினைகள் மற்றும் அதற்கு தீர்வு எடுப்பதற்கான விடயங்கள் குறித்து ஆராயப்படும் கூட்டமாக அமைந்துள்ளது.

எங்களைப்பொருத்தவகையில் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது, வடக்கு கிழக்கு எமது தாயக பூமி.

எங்களுடைய தமிழ் மக்கள் ஒரு இனப்பிரச்சினை சார்ந்து நாங்கள் வடக்கு கிழக்கு சார்ந்து இந்த மண்ணை காப்பதற்காகவே எத்தனையோ போராளிகளும் பொது மக்களும் மரணித்தார்கள்.

எனவே வடக்கில் மட்டும் அபிவிருத்தி மற்றும் அதிகார பரவலாக்கம் தொடர்பாகவும் வடக்கில் இடம் பெறுகின்ற பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வு எடுப்பதற்கான விடையங்கள் குறித்து எடுக்கப்படுகின்ற முயற்சிகள் காலத்தை கடத்துகின்ற ஏமாற்றுகின்ற செயல்பாட்டை கையால் வதாகவும் அமைந்துள்ளது.

ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன் வைக்கின்றோம்.

வடக்கு கிழக்கு சார்ந்த அபிவிருத்தி, அதிகார பரவலாக்கல், வடக்கு கிழக்கில் இருக்கும் பிரச்சினைகளை தீர்க்க அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்ற கோரிக்கையை நாங்கள் முன் வைக்கின்றோம்.

கோரிக்கை நிறைவேற்றப்படாது விட்டால் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதா? இல்லையா? என்பதை நாங்கள் முடிவெடுக்க கூடும்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு இவ் விடையம் குறித்து ஆராய உள்ளது.

எனவே வடக்கு கிழக்கு இணைந்த அபிவிருத்தி, அதிகார பரவலாக்கல் தொடர்பாக, பேச்சுவார்த்தை இடம் பெற வேண்டும்.என்பது எமது கோரிக்கை.எனவே கிழக்கை விடுத்து எவ்வித நல்லெண்ண முயற்சிகள் எடுத்தாலும்இஅந்த முயற்சி தோல்வியடையும்.

எங்களைப் பொறுத்த மட்டில் வடக்கு, கிழக்கு பிரதான மூச்சாக உள்ளது. எனவே கிழக்கை விடுத்து வடக்கை மட்டும் பேச்சு வார்த்தைக்கு அழைப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.இவ்விடயம் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன்.

வடக்கு கிழக்கு இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடலை நடத்த வேண்டும்.

அதன் அடிப்படையில் உரிய காலத்திற்கு முன் தனது கருத்தை மாற்ற வேண்டும். இல்லை என்றால் எதிர்வரும் 11,12,13 ஆகிய திகதிகளில் இடம்பெற உள்ள கூட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள முடியாத துர்பாக்கிய நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.