புது வருடத்தில் உலகளவில் 3.70 இலட்சம் குழந்தைகள் பிறப்பு: யுனிசெப் தகவல்

புத்தாண்டு தினத்தன்று உலகளவில் 3.70 இலட்சம் குழந்தைகளும், இந்தியாவில் ஏறக்குறைய  60 ஆயிரம் குழந்தைகளும் பிறந்திருக்கக்கூடும் என எதிர்பார்க்கிறோம் என்று யுனிசெப்   தெரிவித்துள்ளது.

இதுகுறித்து  யுனிசெப் வெளியிட்ட அறிவிப்பில்,

“உலகளவில் குழந்தைகள் பிறப்பு என்பது 10 நாடுகள் அடிப்படையாக வைத்து கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 59,995 குழந்தைகள் புத்தாண்டு தினத்தன்று பிறந்திருக்கலாம் என எதிர்பார்க்கிறோம்.

அதைத் தொடர்ந்து சீனாவில் 35,615 குழந்தைகள், நைஜிரியாவில் 21,439, பாகிஸ்தானில் 14,161 குழந்தைகள், எத்யோப்பியாவில் 12,006 குழந்தைகள் பிறந்திருக்க கூடும்.

அமெரிக்காவில் 10,312, எகிப்தில் 9,455, வங்கதேசத்தில் 9,236 குழந்தைகள், காங்கோ குடியரசில் 8,640 குழந்தைகள் பிறந்திருக்கலாம் என எதிர்பார்க்கிறோம். 2021-ம் ஆண்டை வரவேற்கும் விதத்தில் பிஜி நாட்டில்தான் முதல் குழந்தை பிறந்தது, அமெரிக்காவில் கடைசிக் குழந்தை பிறந்தது.

2021-ம் ஆண்டில், 14 கோடி குழந்தைகள் பிறக்கும் என எதிர்ப்பார்க்கிறோம். இதில் குழந்தையின் சராசரி வாழ்நாள் வயது 84 ஆகவும், இந்தியாவில் பிறக்கும் குழந்தையின் வாழ்நாள்சராசரி வயது 80.9 ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். புத்தாண்டு தினத்தன்று உலகளவில் 3.70 இலட்சம் குழந்தைகள் பிறந்திருக்கலாம் எனக் கணிக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.