பாதிக்கப்படும் மக்களுக்கான உணவை அரசு வழங்கவேண்டும் எனக்கோரி ஈரோஸ் அமைப்பினர் ஜனாதிபதிக்கு கடிதம்.

கொவிட் – 19 வைரஸ் பரவலை தடுப்பதற்கு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகாரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்கள், மீனவர்கள், கூலி தொழிலாளர்கள், ஆட்டோ சாரதிகள், நடைபாதை வியாபாரிகள், சிறுவியாபாரிகள், சிறு உற்பத்தியாளர்கள், சுயதொழில் முனைவோர் என்போர் பெரும் சவாலுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் பல குடும்பங்களில் உணவுத்தட்டுபாடு நிலவுகின்றது. இவர்களுக்கான அத்தியவசிய உணவுக்கான ஏற்பாட்டை அரசு முன்னெடுக்க வேண்டுமென ஈழப்புரட்சி அமைப்பு (ஈரோஸ்) ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளனர்.

குறித்த கடிதத்தில் தெரிக்கப்பட்டுள்ளதாவது,

அதிமேதகு சனாதிபதி அவர்களுக்கு,

கொவிட் – 19 வைரஸ் பரவலை தடுப்பதற்கு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு எமது நன்றிகள். எனினும், நோய் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு நடைமுறையான தின உழைப்பையும், வருவாயையும் நம்பியிருக்கும் இலட்சக்கணக்கான மக்களுக்கு அடிப்படை தேவையான உணவை பெற்றுக் கொள்வதில் கடுமையான நெருக்கடிகளை எதிர்நோக்க உள்ளார்கள்.

குறிப்பாக பெருந்தோட்ட தொழிலாளர்கள், மீனவர்கள், கூலி தொழிலாளர்கள், ஆட்டோ சாரதிகள், நடைபாதை வியாபாரிகள், சிறுவியாபாரிகள், சிறு உற்பத்தியாளர்கள், சுயதொழில் முனைவோர் என்போர் பெரும் சவாலுக்கு முகம் கொடுத்துள்ளார்கள்.

இதுவரையிலான உலக அனுபவம், கொவிட் 19 வைரஸ் தாக்கத்திலிருந்து மீள எமக்கு அதிக காலம் தேவைப்படும் என்பதை உணர்த்தி இருக்கின்றது. எனவே, ஊரடங்கு நடைமுறையும் நீண்ட காலத்திற்கு தொடர போவது திண்ணம்.

இந்நிலைமையை எதிர்கொள்ள அரசு மக்களுக்கு பொதுவான உணவு நடைமுறையை அறிமுகப்படுத்தி செயற்படுத்த வேண்டும். விடுதலைப்புலிகளுடனான போரின் பின்னர், வன்னி மக்களை முகாம்களில் அடைத்து வைத்திருந்த காலப்பகுதியில் தொண்டு நிறுவனங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்ட போசாக்கு உணவு வழங்கலை இதற்கு அனுபவமாக பயன்படுத்த முடியும்.
எனவே, பொதுவான போசாக்கு உணவு பழக்கமொன்றை அறிமுகப்படுத்தி அதனை நாளாந்த உழைப்பை நம்பியிருக்கும் மக்களுக்கு மாத்திரமாவது இலவசமாக வழங்க வேண்டும் என சமூக பொறுப்பு வாய்ந்த கட்சியினர் என்ற வகையில் கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

பொதுவான போசாக்குணவை அறிமுகப்படுத்துவதானது நெருக்கடியான காலகட்டத்தில் உணவுக்காக ஏற்படும் பொது செலவீனத்தையும், நெருக்கடியையும் தவிர்க்க உதவும்.

மேலும், நெருக்கடி சூழலை எதிர்கொள்ள வேண்டிய காலத்தை பொருத்து வீட்டிலிருந்தே பாதுகாப்பான முறையில் தேசிய பொருளாதாரத்துக்கு மக்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளும் திட்டங்கள் தொடர்பாகவும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக எமது உழைப்பு படை வீட்டில் முடங்கியுள்ள நிலையில் வீட்டிலிருந்தே எமது அத்தியாவசிய சுய தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், நெருக்கடியான சூழலில் சர்வதேச சந்தைக்கு தேவைப்படக் கூடிய பொருட்களை உற்பத்தி செய்யக் கூடிய வகையிலும் விரைவு திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இதற்காக பாதுகாப்பு படைபிரிவினருக்கு மேலதிகமாக நடவமாடும் செயலணி ஒன்றையும் உருவாக்கி செயல்பட வேண்டும் என்பதையும் நாம் முன்மொழிகின்றோம்.

இதற்கான தேர்தல் மற்றும் பிற பொதுநிகழ்வுகளுக்காக ஒதுக்கிய நிதிகளையும், நாட்டில் தேவைக்கு அதிகமான செல்வம் சேர்த்து வைத்துள்ளவர்களின் நிதியையும் பயன்படுத்தி கொள்ள முடியும்.

நெருக்கடியான காலக்கட்டமொன்றில் மக்களை கட்டுப்பாடான பொதுவான கூட்டு வாழ்வு முறைக்கு பழக்கப்படுத்துவதானது, கொவிட் – 19 சவாலை மாத்திரமின்றி எம் நாடு சுதந்திரத்துக்கு பின்னர் சந்தித்துவரும் முரண்பாடுகளுக்கு தீர்வை தரும் பிரவேசமாகவும் அமையும் என்ற இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு சனாதிபதியிடம் ஈழவர் சனநாயக முன்னணியினராகிய நாம் இக்கோரிக்கையை முன்வைக்கின்றோம்.