பாடப் புத்தகங்களில் வட, கிழக்கு ஒரு மாகாணமாகக் காட்டப்பட்டுள்ளது: மகிந்த சீற்றம்

எதிர்காலச் சந்ததியினர் மத்தியில் அடிப்படைவாதத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பாடசாலை மாணவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர் எனப் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை அறநெறி பாடசாலை பரிசளிப்பு விழா வவுனியா, இரட்டைபெரிய குளம் பிரதேசத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

“நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கில் சிங்கள பெளத்த மக்களை சீர்குலைப்பதற்காகவும், அனைத்து இனமக்களின் குடும்ப நிலைமைகளைப் பாதிப்படையச்செய்து பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கிடையில் காணப்படும் உறவையும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையில் காணப்படும் தொடர்பினையும், பிள்ளைகள் மதங்களுடன் கொண்டுள்ள தொடர்பினையும் சீர்குலைப்பதற்காக எதிர்காலச் சந்ததியினரை இலக்காகக் கொண்டு சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மாணவர்களின் பாடப்புத்தங்களில் இது போன்ற பாடத்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு செயற்படுபவர்கள் தொடர்பில் இணங்கண்டு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலச் சந்ததியினர் மத்தியில் அடிப்படைவாதத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பாடசாலை மாணவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர். இன்று பெளத்த அறநெறிகளில் கல்வி கற்றுவரும் பிள்ளைகளே நாளை பெளத்த சமயத்தை அடையாளப்படுத்தப் போகின்றனர். சிங்கள – பெளத்த கலாசாரம் தொடர்பில் இவர்கள் விகாரைகளினூடாகவே கற்றுக்கொள்கின்றனர்.

இதேபோல் நாடு மற்றும் நாட்டு மக்கள் தொடர்பில் பாடசாலை கல்வியினூடாகவே மாணவர்கள் கற்றுக் கொள்கின்றனர். இன்று பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படுகின்ற பாடப் புத்தகங்களிலும் அவர்களின் மனதைப் பாதிக்கும் வகையிலான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன எனப் பல தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சில பாடப்புத்தகங்களில் வடக்கு – கிழக்கு பகுதிகள் ஒரு மாகாணமாகக் காட்டப்பட்டுள்ளன எனவும், சிங்கள புத்தாண்டு தொடர்பான படங்களும் நீக்கப்பட்டுள்ளன எனவும் தெரியவந்துள்ளது” என்றார்.