பாகிஸ்தான் மனித உரிமை செயற்பாட்டாளர்  கனடாவில்  சடலமாக மீட்பு

கனடாவில் தங்கியிருந்த பாகிஸ்தான் மனித உரிமைச் செயற்பாட்டாளர் கரீமா பலூச் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மேற்கு பாகிஸ்தானில் உள்ள பதற்றம் மிகுந்த பலுசிஸ்தான் பகுதியை சேர்ந்த 37 வயதான கரீமா, பாகிஸ்தான் அரசு மற்றும் இராணுவம் மீது  கடுமையான விமர்சனங்களை முன் வைத்துவந்தார்.

இதையடுத்து இவர் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில், அங்கிருந்து தப்பி  கடந்த 5 ஆண்டுகளாக கனடாவில்  வசித்து வந்தார்

கனடாவில் இருந்தபடியே சமூக ஊடகம் வழியாகவும், நேரடியாகவும் பலுசிஸ்தான் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவந்தார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போயுள்ளதாக  டொரன்டோ நகர பொலிஸ் அறிவித்திருந்த நிலையில், அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாக  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கரீமா மரணத்துக்கு 40 நாள்கள் துக்கம் கடைபிடிக்கப்படும் என்று பலுசிஸ்தான் தேசிய இயக்கம் அறிவித்துள்ளது.