கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொரளை மயானத்திற்கு முன்பாக இன்று காலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
கோவிட் 19 தொற்றினால் உயிரிழக்கும் தமது உறவினர்களின் ஜனாஸாக்களை தகனம் செய்ய வேண்டாம் என முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை விடுத்து வந்தாலும், கொரோனா தொற்றில் உயிரிழக்கும் அனைவரது உடல்களையும் தகனம் செய்யும் கொள்கையை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் கடைபிடிக்கின்றது.
இந்நிலையில், இலங்கையில் கோவிட் தொற்று தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தமது நாட்டில் அடக்கம் செய்வது தொடர்பில் மாலத்தீவு கவனம் செலுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.