நீண்ட தூரம் பயணிக்கும் விமானம்; உலக சாதனைப் பயணம் வெற்றி கண்டது

அவுஸ்திரேலியாவின் கரயர் குவாண்டாஸ் விமான போக்குவரத்து சேவை இடைவிடாது மிக நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகள் விமானத்தின் சோதனையை முடித்துள்ளது. இந்த சோதனையில் பயணிகள், விமான ஓட்டுநர்கள், மற்றும் பணியாளர்களின் பயணம் எந்த விதத்தில் பாதிக்கின்றது என்பது குறித்து கண்டறியப்பட்டுள்ளது.

போயிங் 787-9 ரக விமானம் 49 பயணிகளுடன் 19 மணிநேரம் 16 நிமிடங்கள் நியூயோர்க்கில் இருந்து சிட்னி வரை 16,200 கிலோ மீற்றர் தூரம் பயணித்துள்ளது.

அடுத்த மாதம் இதே நிறுவனம் லண்டனில் இருந்து சிட்னி வரை இடைவிடாமல் விமானத்தை இயக்கும் சோதனையில் ஈடுபடவுள்ளது.

2019ஆம் ஆண்டின் இறுதிக்குள் இடைவிடாது இயங்கும் விமான சேவையை தொடங்குவது குறித்து குவாண்டஸ் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த சோதனைத் திட்டங்கள் நிறைவேறினால் 2022 அல்லது 2023ஆம் ஆண்டுகளில் இடைவிடாது நீண்ட தூரம் பயணிக்கும் விமான சேவைகள் இயக்கப்படும்.

எந்தவொரு பயணிகள் விமானமும் இவ்வாறு முழுமையாக பயணிகள் மற்றும் சரக்குகள் ஏற்றிச் செல்லும் வசதிகளுடன் இவ்வளவு நீண்ட தூரப் பயணப் பாதையில் இயங்கவில்லை.

கிழக்கு அவுஸ்திரேலியாவை கடந்து இரவு நேரம் வரை பயணிகள் விழித்திருந்தனர். ஆறு மணி நேரத்திற்கு பின்னர் நல்ல கார்போஹைரேட் உணவு வழங்கப்பட்டது.

இந்த விமான சோதனையில் விமான ஓட்டுநரின் மூளையில் சிற்றலை செயற்பாடு மெலடோனின் அளவுகள், எச்சரிக்கைத் தன்மை, மற்றும் பயணிகளுக்கான உடற்பயிற்சி வகுப்புகள் மேலும் பல மணி நேரம் பயணம் செய்வதால் பயணிகளின் உடலில் ஏற்படும் தாக்கம் பற்றிய பகுப்பாய்வு என்பன அடங்கும்.

விமான போக்குவரத்து சேவையில் இது மிக முக்கியமானது. உலகின் ஒருபுறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு மக்கள் எவ்வாறு பயணிக்கின்றார்கள் என்பதை துரிதப்படுத்தும் ஒரு வழக்கமான சேவையின் மாதிரிதான் என்று குவாண்டஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் அலென் ஜோய்ஸ் கூறியுள்ளார்.

சமீபத்திய ஆண்டுகளில் தீவிரமாக இடைவிடாது நீண்ட தூரம் பயணிக்கும் விமானங்களை இயக்குவதில் சந்தையில் கடும் போட்டி நிலவுகின்றது.

கடந்த ஆண்டு சிங்கப்பூர் ஏயார் லைன்ஸ், சிங்கப்பூரில் இருந்து நியூயோர்க் வரை கிட்டத்தட்ட 19 மணிநேரம் பயணிக்கும் நீண்டதூர விமானத்தை அறிமுகப்படுத்தியது. தற்போது இதுவே உலகின் நீண்ட தூரம் பயணிக்கும் வழக்கமான பயணிகள் விமானமாக  விளங்குகின்றது.

கடந்த ஆண்டு குவாண்டஸ் பெர்த்தில் இருந்து லண்டனுக்கு 17 மணிநேர இடைவிடாத விமான சேவையைத் தொடங்கியது. அதே நேத்தில் கட்டார் எயார்வேஸ்  ஆக்லாந்து மற்றும் தோஹாவிற்கு இடையே 17.5 மணிநேர சேவையை  இயக்குகின்றது.