நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சஜித் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலைமையை அடுத்து ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து விவாதிக்க உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் எந்தவொரு அரசியல் இலாபமும் கருதாமல் நாட்டு மக்களின் நன்மையை மாத்திரம் கருத்தில் கொண்டு மேற்குறித்த நடவடிக்கையை எடுக்குமாறு கேட்டுள்ளார்.

தற்போது நாடு விழுந்துள்ள பள்ளத்தில் இருந்து மீண்டெழ எதிர்க்கட்சி என்ற வகையில் பூரண ஒத்துழைப்புகளை வழங்க தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தேவையான ஒத்துழைப்புகளை வழங்க தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைகளை கூறி அரசியல் ரீதியாக ஒருவர் மீது ஒருவர் தாக்குதல்களை மேற்கொள்ளாது ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.