நாகர்கோவிலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்;கொல்லப்பட்ட மாணவர்களும் நினைவுகூரப்பட்டனர்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் நினைவஞ்சலி, நாகர்கோவில் பகுதியில்  இன்று (15) இடம்பெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நாகர் கோவில் மகா வித்தியாலயம் முன்பாக இந்த நிகழ்வு நடைபெற்றது.

கடந்த 1995ஆம் ஆண்டு 9ஆம் மாதம் 22ஆம் திகதி இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சுக்கு இலக்காகி நாகர் கோவில் மகா வித்தியாலய மாணவர்கள் 21 பேர் உயிரிழந்திருந்தனர்.

அன்றைய தினம் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவாகவும் , முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாகவும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை, அஞ்சலி நிகழ்வுகள் முடிவுற்று ஏற்பாட்டாளர்கள் நிகழ்விடத்தில் இருந்து வெளியேறி சற்று தூரம் சென்ற பின்னர் பருத்தித்துறை பொலிஸார் வாகனங்கள் , மோட்டார் சைக்கிளில் சுமார் 20 க்கும் மேற்பட்டவர்கள் அவ்விடத்திற்கு வந்திருந்தனர்.