தேசிய கீதத்தைப் பாடி போராட்டத்தை முடித்த சென்னை இஸ்லாமியர்கள்

சென்னையில் குடியுரிமைத் திருத்தத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் நடத்திய போராட்டம் நிறைவடைந்தது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அந்த வகையில் சென்னையிலும் பிரமாண்ட போராட்டம் நடைபெற்றது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் வகையில், பல்வேறு பகுதிகளிலிருந்து கலைவாணர் அரங்கம் அருகே ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் குவிந்தனர்.

அங்கிருந்து பேரணியாகச் சென்று சட்டப் பேரவையை முற்றுகையிட இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்டிருந்தன. ஆனால், அதற்கு நீதிமன்றம் அனுமதி மறுத்ததால், சேப்பாக்கம் வரை இஸ்லாமியர்கள் பேரணியாகச் சென்றனர். 35 கமராக்கள் 100 கண்காணிப்பு கமராக்கள் மூலம் காவல்துறையினர் பேரணியை கண்காணித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்பினர் தேசிய கீதம் பாடி போராட்டத்தை முடித்து வைத்தனர்.

உயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பதல் இந்தமுடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. முன்னதாக சட்டமன்றத்தை முற்றுகையிடப் போவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. 5 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்கும் நடைமுறையை பின்பற்றாததால், மார்ச் 11 ஆம் திகதி வரை இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ள சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு தடை விதிப்பதாக உயர்நீதிமன்றம் கூறியிருந்தது