தூங்கும் போது சுடுத்தண்ணீரை ஊற்றினார்கள்: அவுஸ்திரேலியாவில் அடிமையாக வைக்கப்பட்டிருந்த தமிழ்ப் பெண்

“அவர்கள் இறுகிப்போன கோழிக்கறியால் என் தலையில் அடிப்பார்கள். தூங்கும் போது சுடுத்தண்ணீர் எடுத்து ஊற்றினார்கள்,” என அவுஸ்திரேலியாவில் அடிமையாக வைக்கப்பட்டிருந்த தமிழக பணிப்பெண் விசாரணையில்  கூறியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை வீட்டு பணிப்பெண் என சுமார் 8 ஆண்டுகள் அடிமையாக வைத்திருந்த குற்றச்சாட்டில், அவுஸ்திரேலிய தம்பதியினரின் மீது அவுஸ்திரேலியாவின் விக்டோரிய உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.  கடந்த 2 மாதங்களாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், தற்போது அத்தம்பதியினர் குற்றவாளிகள் என தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் நீதிமன்ற உத்தரவின் காரணமாக அத்தம்பதியினர் பெயர் வெளியிடப்படாமல் இருந்த நிலையில், தற்போது நீதிமன்றம் அவர்களை குற்றவாளிகளாக தீர்பளித்ததை அடுத்து அத்தம்பதியினர் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. குமுதினி கண்ணன், கந்தசாமி கண்ணன் என அறியப்படும் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பகுதியைச் சேர்ந்த அத்தம்பதியினருக்கு தண்டனை தொடர்பான விசாரணை வரும் ஜுன் மாதம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் அவர்கள் பிணையில் வீட்டில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் வீட்டுக்கான பொருட்களை வாங்கவும்- மருத்துவ தேவைகளுக்காக வெளியில் செல்லவும் மட்டுமே அவர்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் இந்த காலத்திலேயே ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களது 3 குழந்தைகளுக்கான ஏற்பாட்டினை செய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.