தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமான தலைவரா அம்பேத்கர்? – பகுதி – 2 – கொளத்தூர் மணி

கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி  புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகின்றது. (சென்றவார தொடர்ச்சி)

இதில் நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும், அப்போது தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் தான் பட்டியல் இருந்தது, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பட்டியல் இல்லை. 1935 ஆம் ஆண்டு சட்டத்திற்கு முன்னாலேயே இரண்டு பட்டியலை தயாரித்திருந்தார்கள். ஒன்று தீண்டாமைக்கு உட்பட்ட மக்கள், மற்றொன்று பொதுச் சமுதாயத்தில் இருந்து விலகி, தனித்து வாழும் மக்கள். மக்களை பட்டியல் இன மக்கள் என தனியாக செய்தார்கள். இந்த பட்டியலில் இருந்தவர்களுக்கான இடத்தை ஒதுக்கி அவரால் எழுத முடிந்தது.

பட்டியலில் இல்லாத பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசியல் சட்டத்தில் 340 என்ற ஒரு பிரிவை எழுதினார். அரசு ஒரு ஆணையத்தை அமைத்து, சமுதாயத்திலும், கல்வியிலும் பின் தங்கியிருக்கும் மக்களின் பட்டியலை தயாரித்து, அவர்களின் மேம்பாட்டிற்கு செயல்பட வேண்டும் என்பதுதான் அந்த 340 ஆவது பிரிவு. எழுதியதோடு நிற்கவில்லை, அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளில் அவர் பதவியில் இருந்து விலகினார்.

பதவியில் இருந்து விலகுவதற்கு சில காரணங்களை கடிதத்தில் எழுதியிருந்தார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு  ஆணையம் அமைத்து, அவர்களின் மேம்பாட்டிற்கு செயல்பட வேண்டும் என்று சட்டம் இயற்றி ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், அதற்கான ஆணையம்கூட அமைக்கவில்லை என்பது, அவர் பதவி விலக எழுதிய காரணங்களில் ஒன்று. இப்படிப்பட்டவரைதான் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர் என்று சொல்கிறார்கள்.

இந்துமத புதிர்கள் என்று எழுதினார். இட ஒதுக்கீடு என்பதைகூட, பதவிபெறும் நோக்கத்திற்காக அவர் சொல்லவில்லை. அனைத்து சமுதாய மக்களுக்கும் ஆட்சியிலும், அதிகாரங்களிலும் பங்கு இருக்கவேண்டும் என்பதுதான் அதற்கு அவர் கொண்ட பொருள். அவர் சொன்ன முறையும், அவருக்கு பின்னால் வந்தவர்கள் அதை எடுத்துகொண்ட முறையும் வெவ்வேறாக இருக்கிறது.

நவீனத்துவத்தின் எதிரியாக இருந்தவர் காந்தி. அவருக்கு எதிர்ப்பை காட்டுவதற்கான அடையாளமாக, மிடுக்கான உடையோடும், பெருமித தோற்றத்தோடும் அம்பேத்கர் இருந்தார், அது அவர் விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல. ஆனால் அவருக்கு பின்னால் வந்த தலைவர்கள் அவரை போல் உடைகளை, காலணிகளை அணிவதுதான் அம்பேத்கரியம் என்று கருதி கொண்டார்கள். அவர் ஆட்சி அதிகாரத்தை, அரசியல் அதிகாரத்தை சமூக விடுதலைக்கு ஒரு வழியாக மட்டும் வைத்திருந்தார்.

இப்போது இவர்கள் அதை முடிந்த முடிவாக, ஒரே இலட்சியமாக எடுத்துக் கொண்டு விட்டார்கள். சமுதாயத்தின் மீது அவர் வைத்த பார்வை என்னவாக இருந்தது என்பதில் இருந்துதான் அம்பேத்கரை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்திய நாட்டின் விடுதலை பற்றி பேசுகிற போது, இந்திய விடுதலைக்கு எதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டு பெரியார் மீதும், அம்பேத்கர் மீதும் உண்டு.

காங்கிரஸை எப்போதும் எதிர்த்து வந்த அம்பேத்கர், காந்தியும், காங்கிரசும் தீண்டத் தகாதவர்களுக்கு செய்தது என்ன? என்று ஒரு புத்தகமாக எழுதி, இந்த மக்களுக்கு காந்தியும், காங்கிரசும் செய்த துரோகங்களை பட்டியலிடுகிறார்.

பல வீடுகளின் முன்னால் நாய்கள் இருக்கிறது எச்சரிக்கை என்ற பொருளில் ‘பிவேர் ஆப் டோக்ஸ்’ [Beware of Dogs] என்று எழுதியிருப்பதைப் போல், அந்த புத்தகத்தின் இறுதி அத்தியாத்திற்கு முந்தைய அத்தியாத்தில் ‘பிவேர் ஆப் காந்தி’ என்ற தலைப்பை அம்பேத்கர் எழுதியுள்ளார். தாழ்த்தப்பட்டவர் முன்னேற்றத்திற்காக பல முயற்சிகள் எடுத்ததில் ஒன்றாகதான், 1930 ஆம் ஆண்டு வட்டமேசை மாநாட்டிற்கு சென்று பல செய்திகளை எடுத்து வைத்தார்.

கங்கிரஸ் அப்போது கலந்து கொள்ளவில்லை. 1931 ஆம் ஆண்டு தான் காந்தி – இர்வின் ஒப்பந்தத்தின்படி வட்டமேசை மாநாட்டில்  காந்தி கலந்து கொள்கிறார். [உப்பு சத்யாக்கிரக போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி, இனி போராட்டம் நடத்தமாட்டோம் என்றும், வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்கிறேன் என்றும் போடபட்டது தான் ‘காந்தி – இர்வின் ஒப்பந்தம்’.]

1930 ஆம் ஆண்டு வட்டமேசை மாநாட்டிற்கு செல்வதற்கு முன்னால் காந்தியை சந்தித்து பல விவாதங்களை செய்து, நீங்கள் ஏன் எப்போதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துரோகமே செய்கிறீர்கள் என்று கேட்டு விட்டுதான் அம்பேத்கர் மாநாட்டிற்கு போனார். அந்த மாநாட்டில் அம்பேத்கர் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதமர், தாழ்த்தப்பட்டவர்களுக்கு இரட்டை வாக்குரிமை, தனித்தொகுதி உண்டு என அறிவித்தார். அப்படி கூடாது என்று போராடினார் காந்தி.

இஸ்லாமியர்களுக்கும், சீக்கியர்களுக்கும் தனித் தொகுதியை ஏற்றுகொண்ட காந்தி, தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்குவது, இந்துக்களை பிரிக்கும் சூழ்ச்சி என்றார். அம்பேத்கர் கேட்டார்….. “இது வந்து தானா இந்துகளை பிரிக்க போகிறது? நீங்கள் என்ன இணைத்தா வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? எப்போதும் எங்களை அரவணைத்துக் கொண்டா இருக்கிறீர்கள்? எப்போதும் பிரிந்திருக்கிற நாங்கள், இப்போதும் பிரிந்திருந்து நாங்கள் பெறப்போகும் மேம்பாட்டை ஏன் தடுக்கிறீர்கள்? என்று”

சாகும் வரை உண்ணாவிரதம் என்று அறிவித்த காந்தியை பார்த்து அம்பேத்கர் கேட்டார்…. “நீங்கள் எப்போதாதவது உங்களின் உச்சபட்ச கோரிக்கையான இந்திய நாட்டின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்திருக்கிறீர்களா? எங்கள் உரிமையை பறிப்பதற்காக உண்ணாவிரதம் இருக்கிறீர்களே” என்று.

 “ஏழு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை விட, ஒரு காந்தியின் உயிர் பெரிதல்ல, உறுதியாக நில்லுங்கள்” என்று, அப்போது வெளிநாட்டில் இருந்த பெரியார் அம்பேத்கருக்கு தந்தி கொடுத்தார். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் உரிமைகளை விட்டு கொடுக்க நேர்ந்தது. தொடர்ச்சியாக காந்தியின் சூதான போக்கினை எதிர்த்து நின்ற தலைவர்கள் பெரியாரும், அம்பேத்கரும்.

இந்த சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள மக்களின் உரிமையைப் பற்றி, அவர்களுக்கான மேம்பாட்டு திட்டங்களை ஆய்வு செய்வதற்காக வந்ததுதான்  சைமன் கமிசன். அதை வரவேற்றவர்கள் இந்தியா முழுவதும் இரண்டே தலைவர்கள் பெரியாரும் அம்பேத்கரும் தான். எல்லோரும் எதிர்த்தார்கள், பெரியார் ஆதரித்து வந்த நீதிக்கட்சியும் எதிர்த்தது.

அப்போது பெரியார் எழுதினார்.. “சைமன் கமிசனில்  இந்தியர்கள் யாரையும் நியமிக்கவில்லை என்ற காரணத்தைச் சொன்னார்கள். மிண்டோ மார்லிக், மாண்டேகு சேம்ஸ்போர்டு,  வந்தபோதெல்லாம் கேட்காமல் இப்போதுமட்டும் ஏன் கேட்கிறாய்? ரெளலட் சட்டத்தை ரெளலட் மட்டுமா எழுதினான்? குமாரசாமி சாஸ்திரியும் சேர்ந்துதானே எழுதினான்.

அதனால் என்ன பலன் கிடைத்தது? அவன் வீட்ல நான்கு பேருக்கு வேலை கிடைத்தது. நல்லது வந்தா மட்டும் நீ ஏற்றுகொள்கிறாய், கெட்டது வந்தா வாயை மூடிகொள்கிறாயே. நல்லவேளையாக இந்தியர்கள் யாரையும் நியமிக்கவில்லை, நியமித்திருந்தால் பார்ப்பானைதான் நியமித்திருப்பான், அவன் எங்களுக்கு எதிராகத்தான் இருந்திருப்பான், எனவே இதை நான் வரவேற்கிறேன்” என்று எழுதினார்.

இரண்டாம் உலகப்போரில், இந்தியப் படையை ஆங்கில அரசு போரில் ஈடுபடுத்தியது. இதனால் இந்தியர்களுக்கு என்ன லாபம் என்று கண்டித்து காந்தி அறிக்கை விட்டார். எப்போதும் காந்தியை எதிர்க்கும் அம்பேத்கர் அப்போது வரவேற்றார். காந்தியார் கேட்ட கேள்வியில் நியாயம் இருக்கிறது வரவேற்கிறேன், அதே சமயத்தில் காந்தியாரிடம் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது, இந்திய விடுதலைப் போரில் தாழ்த்தப்பட்டவர்களை ஈடுபடுத்துகிறீர்களே! அதனால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்ன லாபம் இருக்கிறது என்று கேட்டார்.

அதைதான் இன்றும் சொல்கிறோம், தமிழ்தேசியம் பேசுகிற பலபேர் சிக்கல் இல்லாத பிரச்சினை என்பதற்காக பேசிகொண்டிருக்கிறார்கள். ஜாதி இல்லை என்று பேசினால் தான் சிக்கல்வரும், தமிழ்தேசியம் என்று சொன்னால் எந்த சிக்கல்களும் இல்லை. இந்திய நாட்டு விடுதலையின் போது அம்பேத்கர் கேட்டார். தமிழ்நாட்டிற்கு விடுதலை விரும்புகிற நாம் கேட்கிறோம், ஜாதி ஒழிப்பு இல்லாத தமிழ்நாட்டு விடுதலையில் நமக்கென்ன இருக்கிறது?

ஜாதி ஒழிப்பை இலக்காக கொண்ட, அதை நோக்கமாகாக கொண்ட, அதை போராட்டத்தோடு இணைத்துக் கொண்ட தமிழ்நாட்டு விடுதலைக்கு நாம் போராடுவோம். பெரியார் கேட்ட தனித்தமிழ்நாடு, ஜாதி ஒழிந்த, பாலியல், பொருளியல் பேதம் ஒழிந்த – பொது உரிமை கொண்ட பொதுவுடைமை சமத்துவ சமுதாயத்தைப் படைக்க – தடையாக விளங்கும் பார்ப்பன, பனியா கும்பலிடம் இருந்து பிரிந்து, வடவர் சுரண்டலற்ற நாட்டை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான். எனவே ஜாதி ஒழிப்பே உண்மை விடுதலை என்பதை ஏற்றுக் கொள்வோம் .

முற்றும்.