தமிழ் இனம் ஒரே நிலைப்பாட்டில் செயற்பட வேண்டும் – எம். சிவாஜிலிங்கம்

தமிழ் இனம் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில் நடவடிக்கை குழு ஒன்றைஉருவாக்குவதற்கு நேற்று நடைபெற்றக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம். சிவாஜிலிங்கம்  தெரிவித்துள்ளார்.

தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைத்து அவசர கலந்துரையாடல் ஒன்றுக்கு நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “10 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தோம், இதில் ஒன்பது தமிழ் அரசியல் கட்சிகள் கலந்து கொண்ட போதும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கலந்து கொள்ளவில்லை. ஆனால் எதிர்காலத்தில் அவர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்கும் என நம்புகின்றோம். எந்த கட்சி, எந்த முன்னணி என்பதல்ல இங்கு பிரச்சினை. இது ஒட்டுமொத்த தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய அசுர வேகத்திலே செயற்பட்டுக்கொண்டிருக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கான ஒரு தந்திரோபாய வேலைத்திட்டங்களை வகுப்பதற்காகத்தான் இந்த கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டது.

இந்நிலையில் அனைவரும் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் சார்பிலே ஒரே நிலைப்பாடாக இருக்க வேண்டும் என்பது தான் இந்த கூட்டத்தின் நோக்கம்.

இந்த நடவடிக்கை குழு என்பது, மக்கள் போராட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது ஏனைய விடையங்களை எவ்வாறு கையாள்வது என்பதை பொது மக்களிடம் இருந்து கருத்துக்களை பெற்றுக்கொண்டு ஒரு சரியான இலக்கை நோக்கி நாங்கள் பயணிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.