தமிழ்த் திரைப்படங்களை தமிழினப்படுகொலை நாளில் வெளியிடாமல் தள்ளிவைப்பதே உயிர்நீத்த தமிழர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்! – கருணாஸ் எம்.எல்.ஏ., கோரிக்கை

மே18 தமிழினப்படுகொலையின் நினைவுநாள். உலகெங்கும் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களை இந்நாளில்  வெளியிடாமல் தள்ளிவைப்பதே  உயிர்நீத்த தமிழர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்! தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் – தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத்திற்கும் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

மே 18 இன அழிப்பின் நினைநாள்! சிங்களப் பேரினவாதம் நிகழ்த்திய கோரத்தாண்டவ தமிழ் இனப்படுகொலை நாள்! 10 ஆண்டுகள் கடந்தும் மனக்காயம் ஆறாத நாளாக மே 18 நம் மனத்தில் வலியை நினைவுப்படுத்துகிறது.

கடந்த பத்தாண்டுகளாக மே மாதத்தை தாயகத் தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் உலகெங்கும் வாழும் புலம்பெயர் உறவுகளும் மே 18 ஆம் நாளை துக்கநாளாக கடைபிடிக்கிறார்கள் என்பது யாவரும் அறிந்த செய்தி!

இந்த மே மாதம் தமிழர்களுக்கான சோகமாதம்! இம்மாதத்தில் கேளிக்கை விழாக்களோ, தங்களது இல்லத்தில் மகிழ்வான நிகழ்வுகளோ யாவரும் நடாத்துவதில்லை. இந்நிலையை நாம் உணர்ந்து கொண்டு கடைபிடிப்பது இன்னுயிர் ஈந்த தமிழீழ தமிழர்களுக்கு நாம் செய்யும் நினைவேந்தல் ஆகும்.

உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் தமிழ்த்திரைப்படங்கள் வழக்கம் போல் வெள்ளிக்கிழமை வெளிப்படும். அதாவது மே 17.05.2019 – 18.5.2019 ஆகிய நாட்களில் வெளிவருகிற நிலை உள்ளது. மே 18 ஒட்டிய இவ்வாரங்களில் தமிழ்த்திரைப்படங்கள் வெளியிடக்கூடாது என்று உலகெங்கும் வாழும் தமிழர் உணர்வாளர்கள் பலர் கோரிக்கை வைக்கின்றனர். அது உணர்வுபூர்வமானது மட்டுமன்றி ஞாயமானதும் ஆகும்.

தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் வெளிநாடுகளில் ரிலீசாகி வெற்றிப் பெறுகிற நிலையில் இம்மேமாத வாரங்களில் ரிலீசாகும் தமிழ்த்திரைப்படங்களை தள்ளிவைப்பதே தமிழீழத்திற்காக உயிர்நீத்த இலட்சக்கணக்கான தமிழர் உறவுகளுக்கு நாம் செலுத்து அஞ்சலியாகும்.

நான் சார்ந்திருக்கிற தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கு மட்டுமின்றி தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இக்கோரிக்கையை வேண்டுகோளாக வைக்கி றேன்.

இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.