தமிழக மீனவர்கள் கொலை -வழக்குப் பதிவு செய்யப்படுமா?- மத்திய உள்துறை செயலரை பதிலளிக்க உத்தரவு

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக அந்நாட்டுக் கடற்படையினர் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து   மத்திய உள்துறை செயலரை பதிலளிக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் 18ம் திகதி இலங்கை கடற் பரப்பில் வைத்து கடற்படையால் படுகொலை செய்யப்பட்ட நான்கு தமிழக மீனவர்கள் குறித்து மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்றக் கிளையில்  மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில்,“இலங்கைக் கடற்படையினரால்  தமிழக மீனவர்கள் கொலை செய்யப்படுவது, கைது செய்யப்படுவது, தாக்கப்படுவது அடிக்கடி நடைபெறுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் 1500 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.  மேலும்  100 மீனவர்கள் தற்போது வரை இலங்கை சிறையில் உள்ளனர்.

கேரள எல்லையில் இரு மீனவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தது தொடர்பாக இத்தாலிய கப்பல் மாலுமிகள் இருவர் மீது  வழக்கு பதிவு செய்தனர்.  அதே போல் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கொலை செய்துள்ளது.

இந்த மீனவர்களைக் கொலை செய்த இலங்கைக் கடற்படை வீரர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவும், 4 மீனவர்களின் குடும்பத்துக்கு இலங்கை அரசு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,இந்த மனுவை விசாரித்த  நீதி மன்றம், குறித்த  மனு தொடர்பாக மத்திய உள்துறை செயலர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.