தமிழகத்தில் திரையரங்குகள் இயங்க தமிழக அரசு அனுமதி

தமிழகத்தில் விதிக்கப்பட்டிருந்த கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள், 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

கடந்த டிசம்பர் மாதம் திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதித்து செயல்படலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டபோதும், திரையரங்கு உரிமையாளர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து பல கட்டமாக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் பேசி வந்தனர்.

மேலும் வரும் பொங்கல் திருநாளின் போது வெளியாகவுள்ள படங்கள் 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி தரவேண்டும் என நடிகர் விஜய் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் கே. சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, “கொரோனா கால வழிமுறைகளைப் பின்பற்றி, திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

படங்களை திரையிடுவதற்கு முன்னதாக, எல்லா திரையரங்குகளிலும் கொரோனா விழிப்புணர்வு செய்திகள் வெளியிடப்பட வேண்டும்” என்றார்.