தண்ணீர், தகுந்த தட்ப வெப்ப நிலையுடன் புதிய கோள் கண்டுபிடிப்பு

முதன் முதலாக ஒரு கிரகத்தின் சூழலில் தண்ணீர் இருப்பதையும், வாழ்வதற்கு ஏற்ற தட்பவெப்ப நிலை இருப்பதையும் வானியல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்தக் கிரகம் நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே அமைந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. K2-18b  என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கோள் பூமியைவிட 8 மடங்கு பெரியதாகும்.

வாழ்வதற்கு சாத்தியமுள்ள வகையில் தண்ணீர் மற்றும் தட்பவெப்ப நிலை கொண்டதாக கண்டறியப்பட்டுள்ள முதல் வெளிக்கோள் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கோள் பூமியிலிருந்து 110 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாக கூறப்படுகின்றது. லியோ நட்சத்திரக் கூட்டத்தில் அந்தக் கோள் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நட்சத்திரக் கூட்டப் பகுதியில், இந்த வகையில் கண்டறியப்பட்ட முதல் கண்டுபிடிப்பு இதுவாகும். இது தண்ணீர் திரவ நிலையில் கிடைக்கக்கூடிய தொலைவில் இது அமைந்துள்ளது. பூமிக்கு வெளியே தண்ணீர் மற்றும் வாழக்கூடிய தட்பவெப்ப நிலையுடன் ஒரு கோள் கண்டறியப்பட்டுள்ளதானது மிகவும் ஆச்சரியம் மிக்கதாகும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அதே சமயம் இந்தக் கோள் பூமியின் இன்னொரு வடிவம் கிடையாது. இது பூமியைவிட அதிக எடை கொண்டது. மற்றும் புதிய சூழல் தன்மையைக் கொண்டது என்றும் கூறப்படுகின்றது.