ஜெனீவா விவகாரங்களைக் கையாள்வதற்காக ஆராய்வுக் குழு ஒன்றை அமைக்க விக்கி திட்டம்

“ஐ.நா. மனித உரிமைகள் பேரவை விவகாரங்களைக் கையாள்வதற்காக நாங்கள் விரைவில் ஒரு முக்கியமான ஆராய்வுக் குழுவை நியமிக்க பூர்வாங்க ஏற்பாடுகளில் இறங்கியுள்ளோம். குறித்த குழுவில் எம்மோடு சேர்ந்தவர்களை விட சட்டத்தரணிகள், பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள், மனித உரிமை வல்லுனர்கள் போன்ற பலர் இடம்பெறுவார்கள். அக் குழு அங்கத்தவர்கள் குறித்த ஐக்கியநாடுகள் கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கும் நாடுகளின் பிரதிநிதிகளைத் தொடர்பு கொள்வார்கள்.”

இவ்வாறு கூறியிருக்கின்றார் தமிழ்த் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான சி.வி.விக்கினேஸ்வரன். பாராளுமன்றத்தில் இருந்து வெளியே வந்த போது ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குநீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பின்வருமாறு பதிலளித்தார்-

கேள்வி :- 2021 மார்ச் மாதம் வரவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் கலந்துகொள்வீர்களா? அதற்கான ஆயத்தங்கள் ஏதும் செய்துள்ளீர்களா?

பதில் :- தற்போதைய கொரோனா காலத்தில் திட்டமிடுவதும் அதனை நடைமுறைப்படுத்துவதும் சற்றுக் கடினமாகவே இருக்கின்றன. நான் கலந்துகொள்வது பற்றி பின்னர் அறிவிப்பேன். எனினும் நாங்கள் இது பற்றி தற்போது நினைத்திருப்பதைப் பற்றிக் கூறுகின்றேன்.

நாங்கள் விரைவில் ஒரு முக்கியமான ஆராய்வுக் குழுவை நியமிக்க பூர்வாங்க ஏற்பாடுகளில் இறங்கியுள்ளோம். குறித்த குழுவில் எம்மோடு சேர்ந்தவர்களை விட சட்டத்தரணிகள், பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள், மனித உரிமை வல்லுனர்கள் போன்ற பலர் இடம்பெறுவார்கள். அக் குழு அங்கத்தவர்கள் குறித்த ஐக்கியநாடுகள் கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கும் நாடுகளின் பிரதிநிதிகளைத் தொடர்பு கொள்வார்கள். ஐக்கிய நாடுகள் அலுவலர்களைச் சந்திப்பார்கள். சர்வதேச நிறுவன அதிகாரிகளைச் சந்திப்பார்கள். சந்தித்து ஏன் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் ஆஜர்ப்படுத்த வேண்டும் என்பது பற்றி அவர்களுக்கு எடுத்துரைப்பார்கள்.

அத்துடன் அவர்களுடன் சேர்ந்து ஒரு சர்வதேச விசாரணைப் பொறிமுறை பற்றி பேச வேண்டிய அவசியமும் எழுந்துள்ளது. அதாவது யுத்த குற்ற சான்றுகளைச் சேகரித்து பாதுகாப்பாக சேமித்து வைத்தல், எந்த வகையில் குற்றம் புரிந்த இலங்கையின் அரசியல் தலைவர்களையும், யுத்த கால படையணித் தலைவர்களையும் சர்வதேச நீதித்துறைப் பொறிமுறைகளுக்குள் கொண்டு செல்வது பற்றியும் ஆராய வேண்டியுள்ளது. போகப் போக விபரங்களை நான் தருவேன்.