செம்மலை விவகாரத்தை கண்டிக்கும் வைகோ

நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டமைக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் நேற்று (27) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

இலங்கையில் சிங்களவர்களுடன் தமிழ் மக்கள் ஒருபோதும் இணைந்து வாழ முடியாது என்பதற்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நடந்த கொடூர நிகழ்வே சான்றாகும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை அரசின் உதவியோடு பௌத்த பிக்குகள் நடத்தி இருக்கும் இத்தகைய அக்கிரமங்களைப் பன்னாட்டு சமூகம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

இலங்கை என்பது இருவேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடு. தமிழ் ஈழத்தில் இலட்சக் கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு, பத்து ஆண்டுகள் முடிந்து விட்டன.

தமிழர்களைக் கொன்று குவித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் இராணுவ அதிகாரிகள் மீது இனப்படுகொலை வழக்கு பதிவு செய்து, பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்காமல் இருப்பதால் தான், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இத்தகைய பண்பாட்டு அழிப்பு நடவடிக்கைகள் மேலோங்கி வருகின்றன.

இலங்கை அரசால் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்கள் போக, எஞ்சியுள்ள தமிழர்களை, கட்டமைக்கப்பட்ட பண்பாட்டுத் தாக்குதல்கள் மூலம் அழித்து ஒழிப்பதில் இலங்கை அரசும், பௌத்த மதவாதக் கும்பலும் கரம் கோர்த்துக் கொண்டு செயற்படுகின்றன.

மேலும் தமிழீழம் அமைப்பதற்கு ஈழத் தமிழர்களிடமும், உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்த ஐ.நா. சபையும், பன்னாட்டுச் சமூகமும் இனியாவது முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வைகோ அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.