கோட்டபாயவிற்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்துப் பார்ப்போம் என கூறுகிறார் ஜெயானந்தமூர்த்தி

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஸவிற்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்துப் பார்ப்போம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சே. ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட பொது ஜன பெரமுனவின்  அமைப்பாளர் பா.சந்திரகுமார் தலைமையில் மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்

இம்முறை ஜனாதிபதித்தேர்தலை தமிழ் மக்கள் நன்றாக பயண்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்தவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றிய வரலாறுதான் அதிகம் உண்டு.

தந்போதுள்ள ஜனாதிபதியாக இரும்தாலும் சரி பிரதமராக இருந்தாலும் சரி தமிழ் மக்களுக்கு வழங்கி வாக்குறுதிகள் எதனையும்  நிறைவேற்றவில்லை. இம் முறை இந்த ஜனாதிபதித்தேர்தலை மக்கள் சரியாகப் பயன்படுத்தினால் தமிழ் மக்களுக்கு சரியான அபிவிருத்தி திட்டங்களை பெறக்கூடிய ஒரு நிலைப்பாடு எமக்கு ஏற்படும் .

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ காலத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் வேலைத்திட்டங்கள் இடம்பெற்றது.

ஆனால் இப்போது உள்ள இந்த அரசாங்கத்தினால் எந்த ஒரு பிரயோசனமும் தமிழ் மக்களுக்கு கிடைக்க வில்லை. ஆகவே தான் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஸவிற்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்துப் பார்ப்போம் என முடிவெடுத்துள்ளோம்.

என்னைப் பொறுத்தவரையில் எம் நாட்டை தலைமை தாங்கக்கூடிய தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ அவர்கள் உள்ளார் அதேபோன்று பஷில்ராஜபக்ச அவர்கள் கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அவர்களுடன் நாமல் போன்றவர்கள் இந்த மக்களுக்கான பல சேவைகளை செய்து கொண்டிருக்கின்றார்கள். சிங்கள மக்கள் மத்தியில் பார்த்தால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஒரு அரசன் போன்று வர்ணிக்கின்ற ஒரு நிலைமை தான் இருக்கிறது.

ஆகவே நாம் மீண்டும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பார்ப்போம். சிலர் கூறுவார்கள் எந்த ஜனாதிபதி வந்தாலும் சிங்களவர் தான் ஜனாதிபதியாக வருவார் அவர் சிங்கள மக்களுக்குத்தான் செய்வார் என்று அப்படி இல்லை நாம் பேரம் பேச வேண்டும் பேரம் பேசினால் தான் எமது தமிழ் மக்களுக்கான உரிமையை பெற முடியும் நாம் சில வேலைத்திட்டங்களை செய்து காட்டுவதன் மூலம் தான் சரியானவற்றை அடையக் கூடியதாக இருக்கும்.

உண்மையில் பார்த்தீர்களானால் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் உள்ளது அரசாங்கத்திற்கு பக்கபலமாக உள்ளது ஆனால் எமது மக்களுக்கு அவர்களால் என்ன செய்ய  முடிந்தது? வீதியை போடுவதும் வீதிக்கு  பெயர்ப்பலகை படுவது மட்டும் தான் தமிழ் தேசிய
கூட்டமைப்பில் செய்ய முடிந்துள்ளது.

இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் என்று கூறிக் கொண்டு இருப்பவர்கள் சில வாக்குறுதிகளை வழங்கினார்கள் இப்பொழுதும் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள் நாம் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் மக்களுக்கு அபிவிருத்தி செய்வோம் தமிழ் மக்களுக்கு தீர்வுத் திட்டங்களை நாம் பெற்றுத்தருவோம் எனப் பல வாக்குறுதிகளை கொடுத்து கொண்டிருக்கின்றார்கள் ஆனால் இதுவரை எதுவும் நடந்ததாக இல்லை.

2016 ஆம் ஆண்டு நாம் தீர்வை பெற்று விடுவோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருக்கின்ற இரா.சம்பந்தன் அவர்கள் அடித்து கூறினார் ஆனால் இதுவரை எதுவும்  நடக்கவில்லை அதேபோன்று இந்த நல்லாட்சி அரசாங்கம் வந்தவுடன் எல்லாவற்றையும் செய்வோம் எல்லா தீர்வையும் பெற்றுத் தருவோம் என்று கூறினர் ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை.

ஆனால் நல்லாட்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள வர்கள் மட்டுமே வளர்ந்துள்ளனரே தவிர மக்கள் அதே நிலைமையில்தான் இருக்கின்றார்கள்.

கடந்த காலங்களில் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் செய்த அனைத்தும் எமக்கு கஷ்டத்தையும்  பாதிப்பினைதான் தந்தது ஆனால் வேறு வழியில்லை நாம் இவ்வாறு ஆதரிப்பதன் மூலம் எமது மக்களுக்கான தீர்வைப் பெறலாம் என்பதுதான் என்னுடைய கருத்து ஆகவேதான் நாம் பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆதரவு வழங்க முன்வந்தோம் கோட்டாபய ராஜபக்ஷ  அவர்களை ஜனாதிபதி ஆக்குவதாக முடிவெடுத்துள்ளோம். எனவே இம்முறை பொது ஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ச அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்துப் பார்ப்போம் என தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட பொதுஜன பெரமுனவின் மாவட்ட அமைப்பாளர் பா சந்திரகுமார் மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் எமது கட்சி தற்போது வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டுள்ளது நான் கடந்த இரண்டு நாட்களுக்கு முதல் எமது கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்தேன் எமது கட்சிக்கு தேவையான வயிற்றையும் எமது மக்களுக்கு தேவையான விடயங்கள் பற்றியும் அங்கு அவரிடம் எடுத்துக் கூறினேன் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை தமிழ் மக்கள் ஆதரித்து வெற்றிபெறச் செய்தால் தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுத் தருவதாக அவர் என்னிடம் வாக்குறுதி அளித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் தமிழ் மக்கள் மாற்றம் ஒன்றையே எதிர்பார்க்கிறார்கள்.  மகிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சி காலம் வந்தால்தான் மாற்றம் ஒன்று வரும் என எதிர்பார்க்கிறார்கள் மக்கள் மத்தியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒரு சிறிய அமைச்சர்கள் போலதான் செயற்படுகின்றார்கள் யுத்தத்தின் பின்னரும் தேர்தலின் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அவர்களுக்கான ஆதரவை தேடிக் கொண்டார்கள் இம்முறை மக்கள் அவர்களிடம் ஏமாறுவதற்கு தயாரில்லை மக்கள் மத்தியில் இம்முறை அவர்களின் கதை பலிக்காது மக்கள் உணர்ந்து விட்டார்கள் இனி ஒரு ஆட்சி மாற்றம் தேவை என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து விட்டார்கள் இனியும் மக்கள் தமிழ்தேசியகூட்டமைப்புக்கு பின்னால் போவதற்கு மக்கள் தயாரில்லை அதுவும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தயாரில்லை என தெரிவித்தார்.