சுகாதார அமைச்சின் செயலாளராக இராணுவ அதிகாரியை நியமித்தது ஏன்? கிரியெல்ல கேள்வி

கொரோனா வைரஸ் குறித்து சாதகமான புள்ளிவிவரங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடனேயே ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

ஜூன் 20 ஆம் திகதி தேர்தல் ஆணையாளர் தேர்தலை நடத்தச் செய்வதற்காக அரசு பிழையான புள்ளிவிவரங்களைப் பெற முயல்கின்றது என அவர் குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா வைரஸ் தொடர்பில் சாதகமான புள்ளிவிவரங்களைப் பெறுவதற்காகவே அரசு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகயைச் சுகாதார அமைச்சின் செயலாளராக நியமித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளுடனான சமீபத்தைய சந்திப்பின்போது தேர்தல் ஆணையாளர் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளை அடிப்படையாக வைத்தே தேர்தல் குறித்து தீர்மானிப்பேன் எனக் குறிப்பிட்டுள்ளார் என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினால் இன்னமும் ஆபத்துள்ளதை சுகாதார அதிகாரிகள் தொடர்ச்சியாக தெரிவித்து வந்துள்ளனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சமூக தனிமைப்படுத்தல்கள் பின்பற்றப்படாது என்பதால் தேர்தலை இந்த தருணத்தில் நடத்துவது பிரச்சினையான விடயம் என குறிப்பிட்டுள்ள லக்ஸ்மன் கிரியல்ல இதன் காரணமாக வைரஸ் பரவலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியின் மூலம், நாட்டில் வைரஸ் முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்ற போலியான அறிக்கைகளை அரசு எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ள முயலும் என அவர் தெரிவித்துள்ளார்.