சீனாவின் மனித உரிமை மீறல் : ஐ.நா.வில் 39 நாடுகள் கண்டனம்

 

அமெரிக்காவில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையின் மனித உரிமைகள் குழு கூட்டத்தில் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட 39 நாடுகள் ஒன்றிணைந்து வெளியிட்ட அறிக்கையை ஐ.நா.விற்கான ஜேர்மனியின் நிரந்தரத் தூதுவர் கிறிஸ்டோப் ஹெஸ்கன் வாசித்தார்.  அந்த அறிக்கையில் சீனா சிறுபான்மையினர் மீது நடத்தும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் கவலையளிக்கின்றன. குறிப்பாக ஜிங்ஜியாங் மாகாணத்தில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட உய்குர் முஸ்லிம்கள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு அரசியல் ரீதியாக மூளைச்சலவை செய்யப்படுகின்றனர். இதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

சுதந்திரமாக மத வழிபாடுகளை மேற்கொள்ளவும், வெளியில் நடமாடுவதற்கும் ஒன்றுகூடி பேசுவதற்கும் பேச்சுரிமைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது உய்குர் கலாசாரத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல். மேலும் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு உய்குர் மற்றும் இதர சிறுபான்மையினரின் நடமாட்டங்கள் கண்காணிக்கப்படுகின்றன. கட்டாயக் கருத்தடை குடும்பக் கட்டுப்பாடு, கொத்தடிமை போன்ற மனித உரிமைகள் தொடர்பாக ஏராளமான அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

இதேபோன்று திபெத்திலும் சிறுபான்மையினருக்கு எதிராக சீனா மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுள்ளது. கொரோனாவிற்கு சீனாவே காரணம் என போராட்டம் நடத்தியோர் மீதும் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. கொங்கொங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமுல்ப்படுத்தி, மக்களின் பேச்சுரிமையை நசுக்கும்நடவடிக்கையில் சீனா ஈடுபட்டுள்ளது. இது பிரிட்டனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு எதிரானதாகும். இத்தகைய மனித உரிமை மீறல்களை சீனா நிறுத்திக் கொள்ள வேண்டும். ஜங்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் மக்களின் நிலையை நேரில் கண்டறிய ஐ.நா. மனித உரிமைகள் குழுத் தலைவர் மிச்சேல் பச்லெட் தலைமையிலான குழுவிற்கு சீனா அனுமதி அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை வாசிக்கப்பட்டதும் 55 நாடுகள் சார்பாக சீனாவிற்கு ஆதரவான அறிக்கையை பாகிஸ்தான் வெளியிட்டது. அதில் கொங்கொங் பிரச்சினை, சீனாவின் உள்நாட்டு விவகாரம் என்பதால் அதில் பிறநாடுகள் தலையிடக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவும், மேற்கத்திய நாடுகளின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.