சீனாவின் காலனியாக இலங்கை மாறி வருகிறது; ஞானசார தேரர் எச்சரிக்கை

“இலங்கை சீனாவின் காலனியாக மாறி வருகிறது” எனப் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு நேற்றுச் சென்றிருந்த ஞானசார தேரர் செய்தியாளர்களிடம் பேசியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

“இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றத் துக்குத் தெரிவாகும் வாய்ப்பை புதிய அரசமைப்புத் திருத்தின் ஊடாக வழங்குவதன் மூலம் விரைவில் சீனர்களும் இலங்கையின் இரட்டைக் குடியுரிமையை பெற்று நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பார்கள்.

தற்போது கிடைத்துள்ள மக்கள் ஆணையைப் பயன்படுத்தி கடந்த காலத்தில் செயற்பட்டதுபோல் எவரும் செயற்படமுயற்சித்தால், அது வரலாற்று ரீதியாகச் செய்யும் தவறு. குறிப்பாக இரட்டைக் குடியுரிமையை எடுத்துக்கொண்டால், 25 லட்சம் ரூபாவை வங்கி வைப்பில் காட்டி சீனர்களும் இலங்கையின் குடியுரிமை பெற்று இலங்கைப் பிரஜை எனக் கூறி பாராளுமன்றத்துக்கு வர முடியும். எப்படி இது நடக்கும் என்றே நான் நினைக்கின்றேன்” என்றார்.