சிறைப்பிடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பல் விரைவில் விடுவிக்கப்படும் – ஈரான்

ஈரானால் சிறைப்பிடிக்கப்பட்ட இங்கிலாந்துக் கப்பல் விரைவில் விடுவிக்கப்படும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.

‘ஸ்டெனா ஸ்டெனா இம்பெரோ’ என்ற இங்கிலாந்துக் கப்பலை ஈரான் கடற்படை கடந்த ஜுலை மாதம் சிறைப்பிடித்தது. அந்தக் கப்பலில் இருந்த படைத் தளபதி மற்றும் ஊழியர்கள் மீது எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அவர்களை விடுவிப்பதாகவும், ஆனால் சட்டவிதிகளை மீறியதால் கப்பல் மட்டும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஈரான் அரசு ஞாயிற்றுக் கிழமை தெரிவித்த அறிக்கையில், இங்கிலாந்துக் கப்பல் ‘ஸ்டெனா இம்பெரோ’ வரும் நாட்களில் விடுவிக்கப்படும். இது தொடர்பான சட்ட நடைமுறைகள் முடிந்து விட்டன என்று தெரிவித்தது. இதனை ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸும்  உறுதிப்படுத்தினார்.

அணு ஆயுத சோதனையில் அமெரிக்கா – ஈரானிடையே மோதல் வலுத்து வரும் நிலையில், வளைகுடா பகுதியில் பதற்றம் நிலவி வரும் நிலையில், கடந்த ஜுலை 19ஆம் திகதி இங்கிலாந்து நாட்டுக் கொடியுடன் சௌதிக்கு ஹர்முஸ் ஜலசந்திப் பகுதியை் கடந்து சென்று கொண்டிருந்த ‘ஸ்டெனா இம்பெரோ’ என்ற எண்ணெய்க் கப்பலை ஈரான் அரசு சிறைப்பிடித்தது.

இந்தக் கப்பலில் இருந்த 23 பேரில் 18 பேர் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மகாராஷ்ரா, பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இதர ஊழியர்கள் ரஷ்யா, பிலிப்பைன்ஸ், லாட்வியாவைச் சேர்ந்தவர்கள்.