சிறிலங்கன் எயார் லைன்ஸில் அப்பிள் மேக் கையடக்க கணினி தடை

அப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான அப்பிள் மேக் புக் புரோ என்ற கையடக்க கணினியை விமானத்தில் கொண்டு செல்ல சிறிலங்கன் எயர்லைன்ஸ் தடை விதித்துள்ளது. இத்தகவலை சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

நிறுவனத்தின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்பிள் நிறுவனத்தின் 15 அங்குல மேக் புக் புரோ (Apple Macbook Pro)  கணினியின் பற்றரி, அளவிற்கு அதிகமாக வெப்பமாவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாகவும், இவ்வாறு பிரச்சினைக்குரிய கணினிகள் 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அப்பிள் மேக் புக் புரோ கணினி, அபாயகரமானதா என்பதை அந்த நிறுவனத்திடம் உறுதி செய்து கொள்ளுமாறு சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் கேட்டுக் கொண்டது.

விமான நிலையங்களில் இக்கணினி தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகள் ஆராய்ந்த போது, பற்றரி குறித்து மீளாய்வு செய்து கொண்ட ஆவணங்கள் முன்வைக்கப்பட வேண்டுமென சிறிலங்கன் எயார்லைன்ஸ் கூறியுள்ளது.

இக்கணினியின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாத பட்சத்தில், அதனை தமது நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்தில் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படாது என சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.