சிரிய அரசுப் படைகள் அலெப்போவில் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றின

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் அலெப்போ பகுதியின் பெரும்பாலான இடங்களை அரசுப் படைகள் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிரிய அரசு ஊடகங்கள் தரப்பில், “ சிரியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள அலேப்போ பகுதியில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த சில நாட்களாக அரசுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் போர் விமானங்களைக் கொண்டு கடுமையான தாக்குதல் நேற்று நடத்தப்பட்டது. கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த பெரும்பாலான பகுதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிபர் ஆசாத் படைகள் குடியிருப்புப் பகுதிகளில் தாக்குதல் நடத்துவதாகவும், இதன் காரணமாக பெண்கள், குழந்தைகள் எனப் பலரும் காயமடைந்ததாகவும் சிரியாவில் இயங்கும் போர் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

முன்னதாக, சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், உள்நாட்டுப் போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.