சிரியாவில் ஐஎஸ் இடமிருந்து எண்ணெய் வளங்களை காக்க படைகளை அனுப்பும் அமெரிக்கா

சிரியாவின் எண்ணெய் வளங்களை பாதுகாக்க தங்கள் நாட்டு இராணுவப் படைகளை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க பாதுகாப்புப் படை கூறும் போது, “சிரியாவின் வடக்குப் பகுதியில் ஐ.எஸ் படைகளிடமிருந்து எண்ணெய் வளங்களை குர்துகளின் தலைமையிலான சிரிய ஜனநாயக படைகளுடன் இணைந்து பாதுகாக்க திட்டமிட்டிருக்கின்றோம்“ என்று தெரிவித்துள்ளது.

ஆனால் எம்மாதிரியான அமெரிக்கப் படைகள் அமெரிக்கா அனுப்ப திட்டமிட்டிருக்கின்றது என்பதற்கான தகவல் வெளியாகவில்லை.

சிரியாவில் ஐஎஸ் இடமிருந்து மீட்கப்பட்ட பகுதிகளை மீண்டும் அவர்கள் கைப்பற்ற அமெரிக்கா அனுமதிக்காது என்று ட்ரம்ப் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

முன்னதாக துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அமெரிக்கா தனது படைகளை அப்பகுதியிலிருந்து வாபஸ் பெற்ற நிலையில் சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

இந்த நிலையில் மீண்டும் சிரியாவிற்கு படைகள் அனுப்பப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.