2009 முள்ளிவாய்க்காலில் உயிர் தப்பிய 14 வயது கலையரசி பிரிட்டனின் பாராளுமன்றில் உரை

இலங்கையில் இறுதிப் போர் இடம்பெற்ற போது 2009 மே 14ஆம் திகதியே தனது தந்தையை இறுதியாகப் பார்த்ததாக, முள்ளிவாய்க்காலில் உயிர் தப்பிய 14 வயது சிறுமி கலையரசி கனகலிங்கம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

தமிழர் இனப்படுகொலை குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு பிரிட்டனின் பொதுச் சபைக்கு ஆற்றிய உரையில் கலையரசி கனகலிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்.

தனது தந்தையை இறுதியாக பார்த்தது குறித்து உரையாற்றிய சிறுமி கலையரசி, தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்பதை அங்கீகரிப்பது ஏன் அவசியமான விடயம் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

2009ஆம் ஆண்டே தனது வாழ்க்கையில் மிகவும் வேதனையான வருடம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது தான் தனது தந்தையை இறுதியாக பார்த்ததாகவும், தனது தந்தையை விட்டுப் பிரிந்த அந்த நிமிடம் இன்னமும் தனக்கு வேதனையை ஏற்படுத்துகின்றதாகவும் கூறிய கலையரசி, அச்சமாக உள்ளது வாருங்கள் என தந்தையை அழைத்த போது, அவர் தன்னை விட்டு போகவேண்டியிருந்ததாகவும் கலையரசி கனகலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அங்கு ஏனைய பல சிறுவர்களும் தங்கள் தந்தைகளிற்காக அழுது கொண்டிருந்ததை தான் பார்த்ததாகவும், தனது தந்தையின் கழுத்தை இறுக்கி அணைத்தபடி அழுத போது, அவர் எனக்கு முத்தமிட்டுவிட்டு விலகிச் சென்றார் என்றும் கலையரசி குறிப்பிட்டார்.

தான் தற்போது லண்டனில் வாழ்ந்து வரும் அதேவேளை, தனது தாய், தந்தை உயிருடன் இருக்கின்றார்களா இல்லையா என்ற துயரத்துடன் வாழ்வதாகவும், ஒவ்வொரு நாளும்  துயரத்தை மறைத்து விட்டு அவருடைய வருகைக்காக காத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தனது தந்தையைப் பார்ப்பதற்கு சில நாட்களிற்கு முன்னர் தனது உறவினர்களுடன் தான் பதுங்கு குழிக்குள் இருந்த போது,  அறிமுகமான சிறுவன் ஒருவன் சைக்கிள் ஓடுவதைப் பார்த்து அவனைக் கூப்பிட எண்ணிய போது, படையினரின் எறிகணை தங்களுக்கு அருகில் விழுந்து வெடித்ததில், அந்த சிறுவன் தூக்கி எறியப்பட்டான் எனவும் கலையரசி தெரிவித்துள்ளார்.

விமானக் குண்டு வீச்சினால் தனது இரு உறவினர்கள் கொல்லப்பட்டனர். தன்னால் அதை மறக்க முடியாதுள்ளது என்றும், குண்டு பதுங்கு குழியின் மேல் விழுந்ததால் தனது உறவினர்கள் அதற்குள் சிக்குண்டதாகவும் கலையரசி மிகவும் வேதனையுடன் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இன்றும் தனது தந்தைக்கு என்ன நடந்தது என்ற கேள்வியுடன் தான் ஒவ்வொரு நாளும் போராடுவதாகவும் கவலையுடன் தெரிவித்தார்.

மேலும் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்பதை அங்கீகரிப்பது தனது வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வராது என்றும்,  ஆனால் தனது தந்தைக்கும் காணாமல் போன ஏனையோருக்கும் என்ன நடந்தது என்பதை அறிவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தும் எனவும் கலையரசி கனகலிங்கம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.