சர்வதேச விசாரணையை இந்தியா வலியுறுத்த வேண்டும் -கஜேந்திரகுமார்

சிறீலங்காவின் மனித உரிமை மீறல் தொடர்பான சர்வதேச விசாரணையை இந்தியா வலியுறுத்த வேண்டும் என  இந்தியத் தூதுவருடனான சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இந்திய சிறீலங்கா ஒப்பந்தத்தை மதிக்கிறோம். ஆனால் அதன் வழியான 13-ஆவது திருத்தச்சட்ட மூலத்தை தீர்வாக ஏற்க முடியாது . தமிழர் தேசத்தை அங்கீகரிக்கும் தீர்வை தொடர்ந்தும் வலியுறுத்துவோம் எனவும் இந்தியத் தூதுவரிடம் தெரிவித்ததாக கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இந்திய பாதுகாப்பு நலன்களுக்கு தமிழர் தேசம் ஒரு கவசமாகவே இருக்கும். நாம் இந்திய நலன்களுக்கு எதிரானவர்கள் அல்ல. பூகோள அரசியல் போட்டியின் பகடைகளாக இலங்கையின் வட-கிழக்கு பகுதியை இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு வழங்குவதை நாம் எதிர்க்கிறோம் எனவும் இந்தியத் தூதுவரை இன்று சந்தித்துபோது தெரிவித்ததாக கஜேந்திரகுார் குறிப்பிட்டார்.

வட பகுதிக்கு விஜயம் செய்துள்ள இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசி வருகிறார். அதன் ஒரு அங்கமாக இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை இந்தியத் தூதுவர் சந்தித்துப் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த சந்திப்புக்களைத் தொடர்ந்து இந்தியத் தூதுவர் நாளை மட்டக்களப்புக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.