சந்திராயன் – 2 நடந்தது என்ன? ஒரு பார்வை

சந்திராயன் – 2 ஜுலை 22ஆம் திகதி முதல் இன்று வரை (07.09) நடந்தது என்ன என்பதை பார்ப்போம்.

978கோடி ரூபா செலவில் தயாரான சந்திராயன் – 2 3,850 கிலோ எடை கொண்டதாகும். நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர், நிலவில் தரையிறங்கும் லேண்டர் விக்ரம் மற்றும் அய்வூர்தி பிரக்கியான் ஆகிய 3 அங்கங்களைக் கொண்டுள்ளது.

கடந்த ஜுலை 22ஆம் திகதி பிற்பகல் 2.43இற்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹாரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து ஜி.எஸ்.எல்.வி.மார்க் 3 றொக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

பூமியின் சுற்றுவட்டப் பாதையிலிருந்து நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சந்திராயன் – 2 வெற்றிகரமாக செலுத்தப்பட்டு, அதன் சுற்றுப் பாதை நிலவிற்கு நெருக்கமாக அமையும் வகையில் படிப்படியாக குறைக்கப்பட்டது. செப்டெம்பர் 2ஆம் திகதி பகல் 12.45 மணியிலிருந்து 1.45 மணிக்குள் சந்திராயன் – 2 ஆர்பிட்டரில் இருந்து வெற்றிகரமாக, ஆய்வூர்தி பிரக்யானுடன் லேண்டர் விக்ரம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.

திட்டமிட்டபடி செப்டெம்பர் 2ஆம் திகதி ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவை நோக்கி நீள்வட்டப் பாதையில் சுற்றத் தொடங்கியது. நிலவிலிருந்து அதிக பட்சம் 128 கிலோமீற்றர், குறைந்தபட்சம் 114 கிலோமீற்றர் தொலைவு என்ற சுற்றுப் பாதையில் லேண்டர் விக்ரம் பிரிக்கப்பட்டது. இதன் பிறகு பிரக்யானுடன் கூடிய லேண்டர் விக்ரமின் சுற்றுப்பாதை, அதிகபட்சம் 100 கிலோமீற்றர், குறைந்தபட்சம் 30 கிலோமீற்றர் என மாற்றப்பட்டு சுற்றியது.

Chandrayan3 சந்திராயன் – 2 நடந்தது என்ன? ஒரு பார்வைஇந்நிலையில் இன்று அதிகாலை 1.40 மணிக்கு, 30 கிலோ மீற்றர் உயரத்தில் இருந்த போது, லேண்டர் விக்ரம் சுற்றுவது நிறுத்தப்பட்டு, நிலவை நோக்கி தரையிறக்கும் பணி தொடங்கியது. இதை  விஞ்ஞானிகளுடன் காண்பதற்காக, பெங்களுரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு பிரதமர் மோடியும் வந்திருந்தார். படிப்படியாக திட்டமிட்டபடி வெற்றிகரமாக லேண்டர் விக்ரம் இறங்கிய நிலையில், அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

நிலவின் தரையிலிருந்து 2.1 கிலோமீற்றர் உயரத்தில் லேண்டர் விக்ரம் இருந்த போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. லேண்டர் விக்ரமிலிருந்து சிக்னல் கிடைப்பதற்காக விஞஞானிகள் கவலை தோய்ந்த முகத்துடன் காத்திருந்தனர்.

நேரம் செல்லச் செல்ல பரபரப்பு அதிகரித்த நிலையில், விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை என்ற விபரத்தை இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்தார். கடைசியாக கிடைத்த தரவுகள் ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

விக்ரம் லேண்டரிலிருந்து சிக்னல் வரவில்லை என்ற விபரத்தை பிரதமர் மோடியிடம் இஸ்ரோ தலைவர் சிவன் எடுத்துரைத்தார். அப்போது தைரியமாக இருங்கள், நம்பிக்கை இழக்க வேண்டாம் என விஞ்ஞானிகளிடம் கூறிய பிரதமர் மோடி, ஏற்ற இறக்கங்கள் என்பது இயல்புதான் என்றும், இதுவரை சாதித்திருப்பதே மிகப் பெரிய சாதனைதான் என்றும் குறிப்பிட்டார்.

கவலையடைந்த இஸ்ரோ தலைவர் சிவன் அவர்களை பிரதமர் மோடி கட்டித்தழுவி ஆறுதல் கூறினார்.

Chandrayan1 சந்திராயன் – 2 நடந்தது என்ன? ஒரு பார்வைலேண்டர் விக்ரமிலிருந்து சிக்னல் கிடைக்காத நிலையில், அது வெற்றிகரமாக தரையிறங்கியதா இல்லையா என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் இஸ்ரோ வெளியிடவில்லை.