கொரோனா வைரஸ் எந்த இடத்தில் எந்தப் பொருளில் எத்தனை மணி நேரம் உயிர் வாழும் ஆய்வில் புதிய தகவல்

உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தரைத் தளத்திலும், காற்றிலும் பல மணிநேரங்கள் முதல் நாட்கள் வரை உயிருடன் இருக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 1.80 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 7ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நோயை தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த வைரஸிலிருந்து தற்காத்துக் கொள்ள சுயசுத்தம், கைகளை அடிக்கடி சவர்க்காரம் அல்லது சுத்திகரிப்பான் கொண்டு கழுவுதல் போன்றவை அவசியம் என்று வலியுறுத்தப்படுகின்றது.

இதேவேளை அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளை கட்டுரையாக வெளியிட்டுள்ளனர். இந்தக் கட்டுரை “நியூஇங்கிலாந்து ஜேர்னல் ஒப் மெடிசன்“ இதழில் வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எளிதாக அறிகுறிகள் தெரிவதில்லை. சாதாரண மனிதர்களைப் போலத்தான் அவர்கள் இருப்பார்கள். அவர்கள் மூலமாகத் தான் கொரோனா வைரஸ் அதிகமாக மற்றவர்களுக்கு பரவுகின்றது.
கொரோனா வைரஸ், சார்ஸ்-சிஓவி-2 (SARS-CoV-2) ஆகியவை காற்றிலும் பரவக்கூடியது. சுத்தம் இல்லாத பகுதிகளிலும், தரைத்தளத்திலும் 3 மணிநேரம் முதல் பல நாட்கள் வரை வாழக்கூடியது.
செப்புப் பாத்திரங்கள், பொருட்களில் கொரோனா வைரஸ் 4 மணிநேரம் வரை உயிர் வாழும்.
அட்டைகள், காட்போட் போன்றவற்றில் 24 மணிநேரம் வரை உயிர் வாழும்.
பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருட்களில் 2 முதல் 3 நாட்கள் வரை கொரோனா வைரஸ் உயிர் வாழும்.
இதில் சார்ஸ் சிஓவி-2 மற்றும் சார்ஸ் சிஓவி-1 ஆகிய இரு வைரஸ்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியான தன்மை கொண்டவை. இந்த வைரஸ்கள் அதிகமான உயிரிழப்பை உண்டாக்குபவை. இந்த இரு வைரஸ்களும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஆனால், கோவிட் -19 வைரஸ் அதாவது கொரோனா வைரஸ குடும்பத்தில் இருக்கும் இந்த வைரஸ் மிகப் பெரிய அளவில் மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதை விளக்க முடியவில்லை.

இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவர் நாள்தோறும் ஒவ்வொரு இடத்தைத் தொடும் போதும், இருமல் செய்யும் போதும், பொருட்களைத் தொடும் போதும் மற்றவர்களுக்குப் பரப்புகிறார். இவ்வாறு பரவும் கொரோனா வைரஸ் எத்தனை நாட்கள் உயிர் வாழும் என்பதைத்தான் இந்தக் கட்டுரையில் தெரிவித்துள்ளோம் என அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.