கொரோனா ஊரடங்கினால் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டாலும், காலநிலைமாற்றம் குறையவில்லை – உலக வானிலை ஆய்வு மையம்

கொரோனா தொற்றின் காரணமாகக் கடந்த ஆண்டு போடப்பட்ட ஊரடங்கு எந்த அளவிலும் புவி வெப்பமயமாதலையும், பருவநிலை மாற்றத்தையும் மட்டுப்படுத்தவில்லை என்று உலக கால நிலை மாற்ற அறிக்கை 2020ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கின் காரணமாகப் பொருளாதார பின்னடைவுகள் ஏற்பட்டிருந்த நிலையிலும் அது புவி வெம்பமயமாதலையும், காலநிலை மாற்றத்தையும் குறைக்கவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் வரும் ஏப்ரல் 22,23 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள காலநிலை பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டுக்கு முன்னதாக, உலக வானிலை ஆய்வு மையம் கடந்த ஏப்ரல் 10 அன்று இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த மாநாட்டில், கார்பன் உமிழ்வைக் குறைப்பது, காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கான பொருளாதார வழிகள் மற்றும் வேலைவாய்ப்புகள், முற்றிலும் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான நடைமுறைகள், புவி வெப்பமயமாதலை 1.5 செல்சியஸ் ஆகக் கட்டுப்படுத்துவது ஆகியவை குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து “ கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவுகள் காலநிலை மாற்றத்தைச் சற்றும் தடுக்கவில்லை” என்று உலகவானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையை வெளியிட்ட ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குடரெஸ், “வீணடிப்பதற்கு நம்மிடம் நேரமில்லை என்பதனை இந்த அறிக்கை காட்டுகிறது. காலநிலை மாற்றம் வேகமாகிக் கொண்டே இருக்கிறது. இதன் தாக்கங்கள் ஏற்கனவே மக்களுக்கும், உலகத்திற்கும் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. இது செயல்படுவதற்கான ஆண்டு” என்று கூறியுள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் பிற வாயுக்களின் அளவு குறைந்தது. ஆனால் ஒட்டுமொத்த அளவை பார்க்கும் போதே கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு ஆகியவற்றின் அளவு தொடர்ந்து உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதே போன்று எல் நினா விளைவின் காரணமாக மத்திய பசிபிக் கடலில் அதிகளவில் குளிர் உணரப்பட்டதாகவும், உலக அளவில் கடல் மட்ட உயர்வு குறைந்திருந்தாலும் பல இடங்களில் இது ஏற்றத்தாழ்வாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நன்றி – The indian express