கூட்டமைப்பின் செயலாளராக மாவை சேனாதிராஜா நியமனம் – பங்காளிக் கட்சிகள் முடிவு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டமைப்பில் அதிரடியான மாற்றங்களைச் செய்வதற்கு யாழ்ப்பாணத்தில் இன்று கூடிய பங்காளிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இதன்படி கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக, இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை நியமிக்கப்படவுள்ளார்.

யாழ். மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கை தமிழ் அரசு கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பங்காளிக் கட்சிகளின் கூட்டத்தில் இது உட்பட அதிரடியான மாற்றங்கள் சிலவற்றை செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், ப.சத்தியலிங்கம் ஆகியோரும், புளொட் சார்பில் த.சித்தார்த்தன், பா.கஜதீபன், க.சிவநேசன் ஆகியோரும், ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் ஆகியோரும் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தேர்தல்கள் திணைக்களத்தால் அண்மையில் விடுக்கப்பட்ட அறிவித்தல் ஒன்றை சுட்டிக்காட்டிய சீ.வீ.கே.சிவஞானம், கூட்டணி கட்சிகள் அனைத்தும் செயலாளர்களை அறிவிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார்.

இதையடுத்தே, பங்காளிக் கட்சிகள் மாவை சேனாதிராசாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராக நியமிப்பதற்கு தீர்மானித்தன. தலைவராக இரா.சம்பந்தன் தொடர்ந்தும் செயற்படுவார்.