கிறிஸ்மஸ்தீவு தடுப்பிலுள்ள நடேஸ் – பிரியா தம்பதியரின் மகள் மருத்துவமனையில் அனுமதி

கிறிஸ்மஸ் தீவு அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிரியா – நடேஸ் தம்பதிகளின் இரண்டாவது மகள் தருணிகா (3) மருத்துவ காரணங்களுக்காக நேற்றிரவு பெர்த் மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

அவருக்கு அவருக்கு குருதித்தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனவும் மேலதிக சிகிச்சை பெற்றுக்கொள்ளும் பொருட்டு பெர்த் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கிறிஸ்மஸ் தீவில் கடந்த பத்து நாட்களாக தருணிகா கடும் காய்ச்சல்,வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டிந்தார் என்றும் இதனை அடுத்து மேலதிக சிகிச்சைக்கு கிறிஸ்மஸ் தீவு மருத்துவர்கள் பரிந்துரை செய்ததால் பெர்த்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிடப்படுகிறது.

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களான பிரியா- நடேஸ் தம்பதி மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரண்டு மகள்கள் கோபிகா மற்றும் தருணிகா ஆகியோரது தடுப்புமுகாம் வாழ்க்கை கடந்த மார்ச் மாதத்துடன் மூன்று ஆண்டுகளை எட்டியிருந்தது.

குறிப்பாக 3 வயதான தருணிகா தனது வாழ்க்கை முழுவதையும் தடுப்புமுகாமிலேயே கழித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இவ்வளவு நீண்டநாட்கள் தடுப்புமுகாமிலிருக்கும் குழந்தையாக தருணிகா உள்ளார் என குறிப்பிடப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்கில் நடேசலிங்கமும் பிரியாவும் தனித்தனியாக கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் படகு மூலம் ஆஸ்திரேலியா வந்தடைந்தனர்.

நடேசலிங்கம் மற்றும் பிரியாவின் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட அதேநேரம் இவர்களுக்கு வழங்கப்பட்ட bridging விசாவும் 2018 ஆரம்பத்துடன் காலாவதியாகிவிட, அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை இறங்கியது.

2018 மார்ச் மாதம் இக்குடும்பம் பல காலமாக வாழ்ந்துவந்த குயின்ஸ்லாந்தின் Biloela பகுதியிலிருந்து அவர்களை பலவந்தமாக அழைத்துச்சென்று நாடுகடத்த முற்பட்ட வேளையில் சட்டநடவடிக்கை காரணமாக அம்முயற்சி இறுதிநேரத்தில் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் மெல்பன் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர்.

இதையடுத்து நடேசலிங்கம்-பிரியா குடும்பம், நாடுகடத்தப்படக்கூடாதென வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 2018 ஜுன் 21 அன்று மெல்பன் பெடரல் circuit நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மீண்டும் இக்குடும்பத்தை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய குடிவரவுத்துறை அதற்கான கடிதத்தையும் தீர்ப்பு வெளியான அடுத்தநாளே கையளித்தது. ஆனால் நீதிமன்றின் தீர்ப்பிற்கெதிராக நடேசலிங்கம்-பிரியா குடும்பம் மேன்முறையீடு செய்திருந்ததால் குறித்த குடும்பம் நாடுகடத்தப்படுவது இரண்டாவது தடவையாகவும் தடுக்கப்பட்டது.

ஆனால் இக்குடும்பத்தின் மேன்முறையீட்டு மனுவை 2018 டிசம்பர் 21ம் திகதி விசாரித்த பெடரல் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்ததுடன் இக்குடும்பத்தை நாடுகடத்துமாறும் உத்தரவிட்டிருந்தது. பின்னர் இக்குடும்பம் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தநிலையில் அதுவும் நிராகரிக்கப்பட்டது.