கிரீஸில் குவியும் அகதிகள் – அகதிகள் வருகையை கட்டுப் படுத்த அந்நாட்டு இராணுவம் தீவிர முயற்சி

மத்தியத் தரைக்கடல் பகுதியில் உள்ள சிறிய நாடான கிரீஸ் நாட்டிற்கு, ஆப்பிரிக்கா மற்றும் சிரியா போன்ற நாடுகளில் இருந்து கடந்த சில வருடங்களாக  அகதிகள் படகுகள் மூலமும், துருக்கி எல்லை வழியாகவும் வருவது  அதிகரித்துள்ளது.

இதையடுத்து துருக்கி கிரீஸ் எல்லைப் பகுதியின், கிரீஸ் இராணுவத்தினர் அகதிகள் வருகையை தடுக்க, தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அகதிகள் விசயத்தில், இதர ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், கிரீஸுக்கு போதுமான ஒத்துழைப்பையும், உதவிகளையும் வழங்கவில்லை என்று கிரீஸ் கருதுவதோடு, கிரீஸில் குவியும் அகதிகளை, இதர ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், சம அளவில் பகிர்ந்து, தங்கள் நாடுகளுக்குள் அனுமதிக்கவில்லை  என்றும்  கூறப்படுகின்றது.

“கிரீஸ் தலைநகர் ஏதேன்ஸ் அருகே உள்ள ரிட்சோனா அகதிகள் முகாமை சுற்றி, மிக உயரமான, கான்கிரீட் சுற்றுச் சுவர்கள் கட்டப்பட்டு வருகின்றன.

எங்கள் கொள்கைகள் நியாயமானவை, ஆனால் கறாரானவை என்றும், அகதிகள் முகாம்கள் ஒழுங்கான, பாதுகாப்பான முறையில் இயங்குவதை உறுதி செய்கிறோம்” என்று கிரீஸ் குடியயேற்றத் துறை அமைச்சர் நோட்டிஸ் மிட்ராச்சி கூறுகிறார்.

இந்நிலையில், “எங்களின் பாதுகாப்பிற்காக இத்தகைய வலிமையான சுற்றுச் சுவர்களை கட்டுவதாக சொல்கின்றனர், ஆனால் இவை எங்களை சிறைபடுத்தி, கிரேக்க மக்களிடம் இருந்து முற்றிலும் தனிமைப்படுத்துகிறது” என்று ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 17 வயது அகதியான அமிர் கூறுகிறார்.